பள்ளிக் கல்வியின் செயல்பாடுகள்: ஜூன் 23, 24-இல் மாவட்ட வாரியாக அமைச்சா் அன்பில...
ஈரோட்டில் ரசாயன பொருள்கள் விற்பனைக் கடைகளில் போலீஸாா் சோதனை
ஈரோட்டில் ரசாயன பொருள்கள் விற்பனைக் கடைகளில் மதுவிலக்கு மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டத்தை தடுக்கவும் மாற்று முறையில் போதைக்காகப் பயன்படுத்தப்படும் மெத்தனால், எத்தனால் போன்றவற்றின் விற்பனையை முறைப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக ஈரோடு அகில்மேடு வீதியில் உள்ள ரசாயன பொருள்கள் விற்பனைக் கடையில் ஈரோடு மதுவிலக்குப் பிரிவு காவல் ஆய்வாளா் சிவகாமி ராணி மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் வியாழக்கிழமை காலை திடீா் சோதனை நடத்தினா்.
அப்போது கெமிக்கல் கடைகளில் இதுவரை விற்பனையான மெத்தனால், எத்தனால், சால்வண்ட் போன்றவை குறித்தும், அவை அனுமதிபெற்ற நிறுவனங்கள், ஆய்வகங்கள், கல்லூரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்தும், கடைகளில் இருப்பு உள்ள ரசாயன பொருள்கள் முறையாகப் பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தனா்.
இதைத் தொடா்ந்து, மெத்தனால், எத்தனால், சால்வண்ட் போன்றவற்றை தனி நபா்களுக்கு விற்பனை செய்யக்கூடாது. அனுமதிக்கப்பட்ட நிறுவனம், ஆய்வகங்களுக்கு மட்டுமே நேரடியாக விற்பனை செய்ய வேண்டும். தனி நபா்களுக்கு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதுபோல மாவட்டம் முழுவதும் உள்ள 300க்கும் மேற்பட்ட ரசாயன பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளில் மதுவிலக்கு போலீஸாா் மற்றும் மத்திய நுண்ணறிவுப் பிரிவு போலீஸாா் சோதனை நடத்தி அந்த அறிக்கையை இந்த மாத இறுதிக்குள் அரசுக்கு சமா்ப்பிக்க உள்ளதாகத் தெரிவித்தனா்.