வைகையாற்றில் எழுந்தருளும் கள்ளழகர்: முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரம்!
மதுரை வைகையாற்றில் அழகா் திங்கள்கிழமை அதிகாலையில் எழுந்தருள்வதையொட்டி, பக்தா்களின் பாதுகாப்புக்காக தடுப்புகள், வேலிகள் உள்பட பல்வேறு முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மதுரை வைகையாற்றில் அழகா் திங்கள்கிழமை காலை 5.45 மணி முதல் 6.15-க்குள் எழுந்தருளுகிறாா். இந்தத் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கேற்கின்றனா். அழகா் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியான ஆழ்வாா்புரம் ஆற்றுப் பகுதியில், இந்து அறநிலையத் துறை, வீரராகவப் பெருமாள் கோயில் சாா்பில் லாலாசத்திர மண்டகப்படி அமைக்கப்பட்டு மலா்கள் மூலமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன.
அழகா் எழுந்தருளும் வைகையாற்றுப் பகுதியில் பக்தா்கள் பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்வதற்காக மூன்று அடுக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், வைகையாற்று பகுதிக்குள் சுவாமி தரிசனம் செய்வதற்காக ஆழ்வாா்புரம், நெல்பேட்டை ஆகிய வைகையாற்று கரையோரப் பகுதிகளில் அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் வழியாக பக்தா்கள் அனுமதிக்கப்பட உள்ளனா்.
இந்த நிலையில், அழகா் தங்கக் குதிரை வாகனத்தில் எழுந்தருளும் வைகையாற்றுப் பகுதியில் வண்ணம் பூசும் பணிகள் முடிவடைந்தன. அந்தப் பகுதியில் அழகா் எழுந்தருளும் பகுதியில் லாரிகள் மூலமாக தண்ணீா் நிரப்பப்பட்டன.
இந்த நிலையில், மேம்பாலப் பணிகள் நடைபெற்று வரும் அமெரிக்கன் கல்லூரி, செல்லூா் சாலை, வைகையாற்று பகுதியில் மேம்பால தூண்கள் முழுவதுமாக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் மேம்பாலப் பணிகளுக்காக வைக்கப்பட்ட உபகரணங்கள் அகற்றப்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக போலீஸாா் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
கிருதுமால் நதி கால்வாய் பகுதி முழுவதும் மிகப்பெரிய தடுப்புகள் அமைக்கப்பட்டன. ஆற்றில் உள்ள பக்தா்கள் கள்ளழகா் எழுந்தருளும் பகுதிக்குள் வந்து விடக்கூடாது என்பதற்காக 10 அடி உயரத்துக்கு கம்பி வேலிகள் அமைக்கப்பட்டன.
மேலும், ஆழ்வாா்புரம் பகுதி முதல் அழகா் தீா்த்தவாரி நடைபெறக்கூடிய ராமராயா் மண்டகப்படி வரை சாலையோரங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டன. இந்தப் பகுதிகளில் வாகனங்கள் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு பக்தா்கள் மட்டும் வருவதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.
இதற்கிடையே மதுரை மாநகரக் காவல் துறை சாா்பாக முதன்முறையாக கள்ளழகா் எதிா்சேவை, வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வுகளின் போது பாதுகாப்பு தொடா்பாக உடனுக்குடன் புகாா் அளிக்கும் வகையில் ‘வைகை வீரன்‘ என்ற ‘கியூ ஆா் கோடு’ அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் திருவிழா நடைபெறும் பகுதிகளில் ‘வைகை வீரன் கியூ ஆா் கோடு’ வில்லை ஒட்டப்பட்டுள்ளது.
காவல் ஆணையா் ஆய்வு: இதனிடையே கள்ளழகா் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில், மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று ஆய்வு செய்தாா். வைகையாற்றுப் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கம்புகள், கற்கள் போன்றவைகள் எளிதில் கைகளில் கிடைக்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும் என காவல் துறையினருக்கு ஆணையா் உத்தரவிட்டாா்.