ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அதிரடி: சன்ரைசர்ஸுக்கு 225 ரன்கள் இலக்கு!
சன்ரைசர்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அகமதாபாதில் நடைபெற்று வரும் இன்றையப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பந்துவீச்சைத் தேர்வு செய்ய, குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் விளையாடியது.
இதையும் படிக்க: தோல்விகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளுமா சிஎஸ்கே?
ஷுப்மன் கில், ஜோஸ் பட்லர் அதிரடி
முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய கேப்டன் ஷுப்மன் கில், சாய் சுதர்சன் வழக்கம் போல அதிரடியான தொடக்கத்தைத் தந்தனர். குஜராத் அணி 87 ரன்களுக்கு அதன் முதல் விக்கெட்டினை இழந்தது. அதிரடியாக விளையாடிய சாய் சுதர்சன் 23 பந்துகளில் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 9 பவுண்டரிகள் அடங்கும்.
இதனையடுத்து, கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அதிரடியைத் தொடர்ந்தது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷுப்மன் கில் 38 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து அசத்தினார். அதில் 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய பட்லர் 37 பந்துகளில் 64 ரன்கள் எடுத்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். வாஷிங்டன் சுந்தர் 21 ரன்களும், ராகுல் திவாட்டியா 6 ரன்களும் எடுத்தனர்.
இதையும் படிக்க: நாங்கள் பயப்படப் போவதில்லை: சிஎஸ்கே பயிற்சியாளர்
சன்ரைசர்ஸ் தரப்பில் ஜெயதேவ் உனத்கட் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் ஸீஷன் அன்சாரி தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
225 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி விளையாடி வருகிறது.