இந்திய அணிக்காக விளையாடும் கனவை ஒருபோதும் கைவிடமாட்டேன்: அஜிங்க்யா ரஹானே
இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் கனவை ஒருபோதும் கைவிடமாட்டேன் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்க்யா ரஹானே தெரிவித்துள்ளார்.
இந்திய அணி வீரர்களில் ஒருவரான அஜிங்க்யா ரஹானே கடைசியாக கடந்த 2023 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்தார். அவர் இந்திய அணிக்காக வெள்ளைப் பந்து போட்டிகளில் விளையாடி கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆகின்றன.
இதையும் படிக்க: சிஎஸ்கேவுக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் எப்படி சாத்தியமானது? ரகசியம் பகிர்ந்த சஹால்!
மீண்டும் இந்திய ஜெர்சியில்...
36 வயதாகும் அஜிங்க்யா ரஹானே நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அந்த அணியை வழிநடத்தி வருகிறார்.
இந்த நிலையில், மீண்டும் இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவை ஒருபோதும் கைவிடப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸில் அவர் பேசியதாவது: இந்திய அணியில் மீண்டும் இடம்பெற்று விளையாடுவதை விரும்புகிறேன். இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற விருப்பம் என்னுள் இன்னும் இருக்கிறது. இந்திய அணிக்காக விளையாடுவதற்கான முழு உடல்தகுதியுடன் தயாராக இருக்கிறேன். ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்த முடியும். தற்போது ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி வருகிறேன். எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை அப்போது பார்த்துக் கொள்ளலாம்.
நான் எளிதில் விட்டுக்கொடுத்துவிடும் மனப்பான்மை கொண்ட நபர் கிடையாது. ஃபீல்டிங்கில் எப்போதும் என்னுடைய சிறந்த பங்களிப்பை வழங்க நினைப்பேன். 100 சதவிகிதத்துக்கும் அதிகமான உழைப்பை வழங்குகிறேன். நான் உள்ளூர் போட்டிகளிலும் விளையாடுகிறேன். என்னுடைய ஆட்டத்தை நான் தற்போது மிகவும் ரசித்து விளையாடுகிறேன்.
இதையும் படிக்க: பதிரானா பந்துவீச்சில் புதிய விஷயங்களை முயற்சிக்க வேண்டும்: சிஎஸ்கே பயிற்சியாளர்
ஒவ்வொரு நாளும் கண்விழிக்கும் போதும், இன்று என்ன சாதிக்க வேண்டும் என்ற விஷயத்தை எப்போதும் யோசிப்பேன். என்னை பொருத்தவரை, இந்திய அணிக்காக விளையாடுவதைத் தவிர்த்து, எனக்கு வேறு எந்த ஒரு விஷயமும் பெரிதாகத் தெரியவில்லை. எனது நாட்டுக்காக நான் விளையாட வேண்டும். இந்திய அணியின் சீருடையை மீண்டும் அணிய வேண்டும்.
இந்திய அணியில் இடம்பெறாதபோதிலும், தொடர்ச்சியாக பயிற்சி மேற்கொண்டு என்னை முழு உடல்தகுதியுடன் வைத்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய உணவுப் பழக்கங்களிலும் கவனமுடன் இருக்கிறேன். இந்திய அணிக்காக சிறப்பாக செயல்பட வேண்டும் என்ற எண்ணம் இன்னும் இருக்கிறது. என்னுடைய கிரிக்கெட் ஆட்டத்தை மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன் என்றார்.