மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன்..! 36 வயதில் ரஹானே நம்பிக்கை!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் ரஹானே தான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவேன் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறியுள்ளார்.
இந்திய அணிகயில் கடந்த 2023ஆம் ஆண்டு டெஸ்ட்டில் விளையாடிய அஜிங்க்யா ரஹானே வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கடந்த பத்தாண்டுகளாக விளையாடாமல் இருக்கிறார்.
36 வயதாகும் ரஹானே 85 டெஸ்ட் போட்டிகளில் 5077 ரன்களும் 90 ஒருநாள் போட்டிகளில் 2962 ரன்களும் எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ப்ரஸ் ரூம் நிகழ்ச்சியில் ரஹானே பேசியதாவது:
100% அதிகமாக உழைப்பேன்
இந்திய அணிக்கு மீண்டும் விளையாட விரும்புகிறேன். அதற்கான ஆசை, பசி, ஆர்வம் என எல்லாமே இருக்கிறது. உடல்நலம் ரீதியாக நான் தகுதியுடனே இருக்கிறேன்.
தற்போதைக்கு நான் ஒரு போட்டியை மட்டுமே கவனத்தில் கொள்கிறேன். ஐபிஎல் போட்டிகளில் நன்றாக விளையாட வேண்டும். எதிர்காலத்தில் என்ன நடக்கிறது என்பதை பிறகு பார்த்துக்கொள்ளலாம்.
நான் எப்போதும் விடாமுயற்சியுள்ள நபர். ஃபீல்டிங்கில் என்னுடைய சிறந்தவற்றை அளிக்க முயற்சிப்பேன். அது 100 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும்.
மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவேன்
எப்போதுமே என்னால் எதைக் கட்டுப்படுத்த முடியுமோ அதில்தான் நான் கவனம் செலுத்துவேன்.
உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் எப்போதும் விளையாடுவேன். தற்போதைக்கு மகிழ்ச்சியாக கிரிக்கெட் ஆடி வருகிறேன்.
தினமும் எழுந்தவுடன் என்ன சாதனையை செய்து முடிக்க வேண்டும் என்பதை சிந்திப்பேன். இந்தியாவுக்காக விளையாடுவதைவிட சிறந்தது எதுவுமில்லை.
எனது நாட்டை பிரதிநிதிப்படுத்தி விளையாட வேண்டும். இந்திய அணியின் நிறம் பதிந்த உடையில் விளையாட வேண்டும்.
ஃபிட்னஸ் முக்கியம்
கிரிக்கெட் இல்லாதபோதும் நான் ஒரு நாளைக்கு -3 செஷன்கள் பயிற்சி செய்வேன்.
இப்போதைக்கு என்னை உடல் ரீதியாக நலமுடன் வைத்துக்கொள்வது முக்கியமென நினைக்கிறேன். இயல்பு நிலைக்கு திரும்புதல் என்பது மிகவும் முக்கியமானது.
எனது உணவுக் கட்டுப்பாட்டிலும் கவனமாக இருக்கிறேன். இந்தியாவுக்காக நன்றாக விளையாட வேண்டுமென நினைக்கிறேன். இப்போதும் ஆர்வத்துடன் கிரிக்கெட்டை நேசிக்கிறேன் என்றார்.
பார்டர் கவாஸ்கர் தொடரில் ஆஸி.யை ரஹானே தலைமையில் இந்திய அணி வீழ்த்தியது குறிப்பிடத்தக்க சாதனையாக இருக்கிறது.