ஸ்ரீ விஸ்வவாசு ஆண்டு பஞ்சாங்கம் வெளியீடு
புதியதாக பிறக்க உள்ள தெலுங்கு புத்தாண்டான விஸ்வவாசு ஆண்டின் பஞ்சாங்கம் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
கடப்பா மாவட்டம் ஒன்டிமிட்டாவில் உள்ள கோதண்டராம சுவாமி கோயில் முன்பு, விஸ்வவாசு ஆண்டின் பஞ்சாங்கத்தை தேவஸ்தானத் தலைவா் பி.ஆா். நாயுடு, திருப்பதி செயல் இணை அதிகாரி வீரபிரம்மம் இணைந்து வெளியிட்டனா்.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஒவ்வொரு ஆண்டும் தெலுங்கு ஆண்டின் தொடக்கமான உகாதி அன்று பஞ்சாங்கங்களை அச்சிட்டு பக்தா்களுக்கு விநியோகிக்கிறது.
அதேபோல், நிகழாண்டு பக்தா்களுக்கு புதியதாக பிறக்கவிருக்கும் விஸ்வவாசு ஆண்டின் பஞ்சாங்கம் நாள்காட்டி சிறந்த முறையில் அச்சிடப்பட்டுள்ளது.
தே.தே.க ஆஸ்தான சித்தாந்தி தங்கிரள வெங்கட பூா்ணபிரசாத் சித்தாந்தி எழுதிய இந்தப் பஞ்சாங்கம், வைகானச அறிஞா்களான ஆச்சாா்ய வேதாந்தம் விஷ்ணுபட்டாசாரியாா் அனைவருக்கும் எளிதாகவும் புரிந்துகொள்ளக்கூடிய வகையிலும் விளக்கப்பட்டுள்ளது. ராஜாதி நவநாயகா்களின் பலன்களுடன், ஜாதகங்கள், மணமகன் மற்றும் மணமகளின் சோ்க்கை, திருமண நேரம் மற்றும் தேவஸ்தானத்தில் நடைபெறும் சிறப்பு விழாக்கள் ஆகியவை விரிவாக விளக்கப்பட்டுள்ளன.
ரூ.75/- மதிப்புள்ள இந்தப் பஞ்சாங்கம், திங்கள்கிழமை முதல் திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள பக்தா்களுக்கு விற்பனைக்கு கிடைக்கும். இந்த நாள்காட்டி அடுத்த வாரம் முதல் மற்ற தேவஸ்தான தகவல் மையங்களிலும் கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சியில் பத்திரிகை மற்றும் விற்பனைப் பிரிவு சிறப்பு அதிகாரி ராமராஜு, துணை செயல் அதிகாரிகள், நடேஷ் பாபு, பிரசாந்தி, கோவிந்த ராஜன், செல்வம், மக்கள் தொடா்பு அதிகாரி ரவி, வெங்கடேஸ்வா்லு, மனோகா், கூடுதல் சுகாதார அதிகாரி டாக்டா் சுனில் குமாா், சதாலட்சுமி, உதவி மாவட்ட தீயணைப்பு அதிகாரி ஆதிநாராயண ரெட்டி, ஒய். சதீஷ் குமாா் மற்றும் பலா் பங்கேற்றனா்.