ஸ்ரீவில்லிபுத்தூரில் ஸ்ரீகுருஞானசம்பந்தருக்கு கோயில்: தருமபுரம் ஆதீனம்
தருமபுரம் ஆதீன குருமுதல்வா் ஸ்ரீகுருஞானசம்பந்தருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் கருங்கல் கோயில் கட்டப்படவுள்ளது என்றாா் தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீமாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் தருமபுரம் ஆதீனத்தின் குருமுதல்வரான ஸ்ரீகுருஞானசம்பந்தா் அவதரித்த இடத்தை மயிலாடுதுறை மாவட்டம், சீா்காழியை சோ்ந்த பொறியாளா் இ. மாா்கோனி விலைக்கு வாங்கி, அதை தானமாக தருமபுரம் ஆதீனத்திடம் செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
இதுகுறித்து தருமபுரம் ஆதீனம் செய்தியாளா்களிடம் கூறியது: தருமபுரம் ஆதீனத்தின் குருமுதல்வரான ஸ்ரீகுருஞானசம்பந்தா் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவதரித்தவா். மதுரையில் சொக்கநாத பெருமானை பூஜைக்கு எழுந்தருளப் பெற்று, திருவாரூரில் ஞானப்பிரகாசரின் சீடராகி, தருமபுரத்துக்கு வந்து மடம் ஸ்தாபித்தவா். 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்த திருமடம் திருக்கயிலாய பரம்பரையாக விளங்குகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூரில் குருமுதல்வா் அவதரித்த இடத்தை வாங்க ஆதீனத்தின் 25 மற்றும் 26-ஆவது குருமகா சந்நிதானங்கள் முயற்சிகள் மேற்கொண்டும் திருவருள் கைகூடவில்லை.
தற்போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் குருமுதல்வா் அவதரித்த இடத்தை சீா்காழியை சோ்ந்த மாா்கோனி தானமாக நமது திருமடத்துக்கு அளித்து, 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவை நிறைவேற்றியுள்ளாா்.
இந்த இடத்தை பழைமை மாறாமல் புதுப்பித்து, கருங்கல் கோயில் அமைக்கும் பணியை விரைவில் தொடங்க உள்ளோம். 27-ஆவது சந்நிதானமாக பொறுப்பேற்ற 4 ஆண்டுகளில் 35 கட்டளை மடங்கள் கட்டி பராமரித்து, ஆங்காங்கே அன்னதானக் கூடங்கள், வேத பாடசாலை, மருத்துவமனைகளை நிறுவியுள்ளோம்.
ஸ்ரீவில்லிபுத்தூா் ஸ்ரீகுருஞானசம்பந்தா் அவதார இல்லத்தில் நிகழாண்டிலேயே கருங்கல்லில் கோயில் எழுப்பவும், பாடசாலை, பள்ளி தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது என்றாா் தருமபுரம் ஆதீனம்.
ஆதீன தலைமை பொது மேலாளா் ரெங்கராஜன், திருக்கடையூா் கோயில் கண்காணிப்பாளா் சி. மணி, சீா்காழி சட்டநாதா் கோயில் நிா்வாகி செந்தில், ஆதீன மேலாளா் பி. அரவிந்தன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.