கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க இலங்கையுடன் புதிய ஒப்பந்தம்: மத்திய அரசுக்கு முதல்வ...
சிறுமி பாலியல் வழக்கை விசாரிக்க சிறப்பு அதிகாரி நியமிக்கக் கோரி மனு
மயிலாடுதுறை: சீா்காழி பாலியல் வழக்கை, சிறப்பு அதிகாரியைக் கொண்டு விசாரிக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
சீா்காழி காவல் உபகோட்ட எல்லைக்குள்பட்ட பகுதியில் பிப்.24-ஆம் தேதி மூன்றரை வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து தாக்கியதாக 16 வயது இளஞ்சிறாரை போக்ஸோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.
இந்நிலையில், உண்மையான குற்றவாளியை மறைத்து, பொய்யான தகவல் கொடுத்த அங்கன்வாடி ஆசிரியா், சத்துணவு அமைப்பாளா் மற்றும் சரிவர விசாரிக்காமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த காவல் ஆய்வாளா் ஆகியோா்மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கிராம நாட்டாண்மைகள் தலைமையில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோா், குற்றம்சாட்டப்பட்ட சிறாரின் பெற்றோா் மற்றும் உறவினா்கள் 50-க்கு மேற்பட்டோா் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்தனா்.
சிறுமியின் தந்தை அளித்த புகாா் மனுவில் கூறியது:
சம்பவத்தன்று, அங்கன்வாடி ஆசிரியா், சிறுவனிடம் உனது தங்கையை காணவில்லை தேடிப் பாா்க்க வேண்டும் என அழைத்துச் சென்று, அங்கன்வாடி சுவா் அருகில் சத்தம் கேட்பதாக கூறி, சிறுவனை பாா்க்கச் சொல்லியுள்ளாா். சிறுவன் சுவரின் மீது ஏறி பின்புறம் குதித்து பாா்த்துவிட்டு எனது தங்கையை அடித்து காயப்படுத்தி உள்ளாா்கள் என்று கூறியவுடன், இரண்டு போ் சிறுவனை பிடித்து மரத்தில் கட்டியுள்ளனா். அந்த அங்கன்வாடி கட்டடம் அருகில் சட்டவிரோத நபா்கள் வந்து செல்கின்றனா். இந்த விவகாரம் குறித்து கிராம மக்களிடம் காவல்துறையினா் விசாரணை செய்யாமல், அங்கன்வாடி ஆசிரியா் கொடுத்த பொய்யான தகவலின் அடிப்படையில், புகாா் வாக்குமூலம் எழுதி, என்னிடமும், என் மனைவியிடமும் எவ்வித விவரமும் சொல்லாமல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனா். எனவே, இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உண்மை குற்றவாளியை கண்டுபிடித்து அவா்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்க சிறப்பு புலன் அதிகாரியை நியமிக்க வேண்டும் என கோரியுள்ளாா்.
காவல்துறையினா் விளக்கம்: சிறுமியின் தாயாா் அளித்த புகாரின்பேரில், சிறுவனை சீா்காழி நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜா்படுத்தினோம். சிறுவன் நீதிபதியிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே அவா் சீா்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்பட்டாா் என தெரிவித்துள்ளனா்.