பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அரசு முடிவ...
ஹிட் அடிக்குமா நானியின் HIT 3? - திரை விமர்சனம்!
தெலுங்கு நடிகர் நானி நடிப்பில் ஹிட் திரைப்பட வரிசையில் 3 ஆவது பாகமாக வெளியாகியுள்ளது இந்த ஹிட் 3 திரைப்படம். வன்முறைக் காட்சிகள் அதிகமாகக் கொண்ட ஆக் ஷன் திரைப்படமாக வெளியாகியுள்ள இந்தத் திரைப்படம் எப்படி இருக்கிறது? சுருக்கமாகப் பார்க்கலாம்!
அதிகமாக கோவப்படும் காவல் அதிகாரியான நானி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஒரே மாதிரியாக நடைபெறும் கொலைகளை விசாரிக்கிறார். அதில் அவர் என்ன கண்டுபிடித்தார்? கொலையாளிகளைப் பிடித்தாரா? நடக்கப்போகும் கொலைகளைத் தடுத்தாரா? என்ற புதுமையில்லாத கேள்விகளுக்கான பதிலைக் கண்டறியும் கதைக்களத்தில் சில புதிய விஷியங்களைப் புகுத்தி ஹிட் அடிக்க முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சைலேஷ் கொலனு.
நாம் அதிகமாக பார்த்துப் பழகிய, சாதாரண கிரைம் திரில்லர் கதையாகத் தோன்றினாலும் சைக்கோ கான்செப்ட்டை அடுத்த ஸ்டெப்பிற்குக் கொண்டு சென்றுள்ளார் எழுத்தாளர் மற்றும் இயக்குநர் சைலேஷ்.

பின்வரும் Paragraph Spoiler-களைக் கொண்டது! விருப்பமில்லாதவர்கள் அடுத்த Paraவை அணுகவும்!
ஒரு படத்தில் 1, 2 சைக்கோக்களை மட்டுமே பார்த்துப் பழகிப்போன நமக்கு, ஒரே படத்தில் ஒரே இடத்தில் 150 சைக்கோக்களைக் காட்டி பயமுறுத்தியது சிறப்பு. என்னதான் கிரைம் திரில்லராக இருந்தாலும் இது ஹீரோயிக் திரில்லர் என்பதால் சில தொய்வுகளும் படத்தில் இருக்கத்தான் செய்கின்றன. உதாரணத்திற்கு 150 சைக்கோக்களை எப்படி நானி சமாளிப்பாரோ என நினைக்கும்போது, ஹீரோன்னா ஜெயிச்சுதானே ஆகணும் எனும் நினைப்பைக் கொடுக்கும் காட்சிகள் வந்துவிடுகின்றன. என்றாலும் இதுபோன்ற கமெர்ஷியல் கிரைம் திரில்லர்களில் இது நல்ல முயற்சியாகவே படுகிறது.

படத்தில் நன்றாக இருந்த விஷயங்களில் ஒன்று, திரைக்கதை. ஓக்கேவான கதையை முடிந்தவரை விறுவிறுப்பாக கொடுக்க முயன்று அதில் வெற்றியும் கண்டுள்ளார் எழுத்தாளர். முதல் 20 - 30 நிமிடங்களுக்கு ஹீரோ ஹீரோயின் அறிமுகக் காட்சிகள், ஹீரோவின் குடும்பம் எனக் கொஞ்சம் மெதுவாக நகரும் கதை, ஹீரோ பிகாருக்கு பறக்கவும், அவருடன் சேர்ந்தே பறக்க ஆரம்பிக்கிறது. இவ்வளவு நேரம் போரடிப்பதாக உணர்ந்த படம், இடைவேளைவரை பரபரப்பாக நகர்ந்துவிடுகிறது. இடைவேளைக்குப் பிறகும் அதே பரபரப்பைக் கடத்த்த முயன்று, அதிக சண்டைக் காட்சிகளால் அங்கங்கு பிடிப்பை இழக்கிறது. அதிலும் காதல் காட்சி என்றாலே, ஐஸ் கிரீம், பீச், பானிப்பூரி, மெதுவாக கையைத் தொட்டு விளையாடுதல் என எந்தக் காட்சியும் காதலை உணர்த்தவில்லை. இதுபோன்ற குட்டிக் குட்டி மைனஸ்கள் இருந்தாலும் மொத்தமாகப் பார்க்கையில் பாஸ் மார்க்கை வாங்கிவிடுகிறது இந்த ஹிட்.
நடிப்பு எனப் பார்க்கையில், சும்மா சும்மா கோவப்படும் கோவக்கார காவல்துறை அதிகாரியாக தனது சிறப்பான நடிப்பைக் கொடுத்துள்ளார் நானி. ஆரம்பத்திலிருந்து கடைசி வரை,, தானே ஒரு கோவக்கார சைக்கோவாகச் சரியாகப் பொருந்தியுள்ளார் என்றே சொல்ல வேண்டும். அடுத்ததாக நாயகியாக வரும் ஸ்ரீநிதி ஷெட்டி மற்ற எல்லாக் காட்சிகளை விடவும் காதல் காட்சிகளில், ஹீரோவுடனான நெருக்கமான காட்சிகளில் நன்றாக நடித்துள்ளார் எனச் சொல்லலாம். அவர் சொல்லும் காதல் பிளாஷ்பேக் கொஞ்சம் போர் அடித்தாலும், பேசும் காதல் வசனங்களில் கிரிஞ் வாசனை அடித்தாலும் எப்படியோ அந்தக் குறை, சட்டென மறையும்படி ஒரு சிரிப்பு சிரித்து, நானியோடு சேர்த்து நம்மையும் மயக்கிவிடுகிறார். அடுத்ததாக நடிப்பில் எனக் குறிப்பிட்டுச் சொல்ல பெரிதாக யாருக்கும் இடமில்லை. அதிகமான கதாபாத்திரங்கள், குறைவான நேரம் என்பதால் இந்தக் கதை யாரிடமும் அதிக நடிப்பைக் கேட்கவில்லை.

அடுத்ததாக குறிப்பிட வேண்டிய விஷியங்களில் ஒன்று நாம் டப்பிங் படங்களில் அதிகமாகப் பார்க்கும் நெருடல்கள்தான். வசனங்களும் சரி, பாடல்களும் சரி, சில நகைச்சுவைக் காட்சிகளும் சரி படத்தோடு ஒட்டாத வகையில் டப்பிங் செய்யப்பட்டிருப்பதை ஒரு குறையாக சொல்லலாம். எல்லா டப்பிங் படங்களிலும் இருப்பதுதானே என நாம் விட்டுச் செல்வதேகூட இந்த விஷியத்தில் முன்னேற்றம் வராமல் இருப்பதற்குக் காரணமாக இருக்கலாம்.
இரண்டாம் பாதியில் எதிரியுடன் மாற்று அடையாளத்துடன் நானி இருக்கும் காட்சிகள் எல்லாம் விறுவிறுப்பாக அடுத்தடுத்த டிவிஸ்டுகளுடன் நன்றாகவே பயணிக்கின்றன. சில இடங்களில் அந்த ஹீரோ லாஜிக் இடிக்கலாம் ஆனாலும் அவ்வளவு தொந்தரவாக அவை தெரிவதில்லை.

முக்கியமாக படத்திலுள்ள வன்முறைக் காட்சிகளுக்கான வேலைபாடுகளைப் பாராட்டியே ஆகவேண்டும். சண்டைப் பயிற்சிக்கும் ஒப்பணை வேலைகளுக்கும் பாராட்டுகளைச் சொல்லியே ஆகவேண்டும். இருந்தாலும் அவ்வளவு வன்முறைகளைக் கொஞ்சம் தவிர்ப்பது நல்ல முடியாக இருக்கும்.
முடிவாக இவ்வளவு விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு படத்தை பார்க்கலாமா, வேண்டாமா என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள். முக்கியமாக யாருடன் செல்லலாம் என்பதையும் முடிவு செய்துகொள்ளுங்கள்! கண்டிப்பாக குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டாம்!!