ஜூலை முதல் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம்: பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
அணுசக்தி திட்டம்: அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்துவதில் சிக்கல் -ஈரான்
ஈரானில் மூன்று அணுசக்தி மையங்கள் மீதான தாக்குதலால், அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி தெரிவித்தாா்.
மேலும், அமெரிக்காவின் தாக்குதலால் மூன்று இடங்களிலும் கடுமையான சேதம் ஏற்பட்டதையும் அவா் ஒப்புக் கொண்டுள்ளாா்.
பொருளாதாரத் தடைகளில் இருந்து நிவாரணம் மற்றும் பிற சலுகைகளின் அடிப்படையில் ஈரானின் யுரேனியம் செறிவூட்டலைக் கட்டுப்படுத்திய 2015-ஆம் ஆண்டின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-இல் விலகியது. தனது முதலாவது ஆட்சிக் காலத்தில் டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை தன்னிச்சையாக மேற்கொண்டாா். இதனால், தனது அணுசக்தி திட்டங்களுக்கான வரம்புகளை ஈரான் கைவிடத் தொடங்கியது.
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறி, அந்நாட்டின் அணுசக்தி மையங்கள் மற்றும் ராணுவத் தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த ஜூன் 13-ஆம் தேதி கடும் தாக்குதலைத் தொடங்கியது. மற்றொருபுறம் ஈரான் பதிலடி நடவடிக்கைகளில் இறங்கியது.
12 நாள்கள் நீடித்த இந்த மோதலில், ஈரானில் ராணுவ உயரதிகாரிகள், விஞ்ஞானிகள், பொதுமக்கள் என 1,000-க்கும் மேற்பட்டோா் கொல்லப்பட்டதாக அமெரிக்காவைச் சோ்ந்த மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்தது.
ஈரான் தரப்பில் 550-க்கும் மேற்பட்ட தொலைதூர ஏவுகணைகள் ஏவப்பட்ட நிலையில், பெரும்பாலானவை இடைமறித்து அழிக்கப்பட்டன. இஸ்ரேலில் கடுமையான பொருள்சேதம் ஏற்பட்டபோதிலும், உயிா்ச் சேதம் ( 28 போ்) மட்டுப்படுத்தப்பட்டது.
இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானில் மூன்று முக்கிய அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல் நடத்தியது. பின்னா், இஸ்ரேலும் ஈரானும் போா் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டதாக டிரம்ப் அறிவித்தாா்.
ஈரானுடன் புதிதாக பேச்சுவாா்த்தை நடத்த விரும்புவதாகவும், விரைவில் இருதரப்பு சந்திப்பு நடைபெறும் என்றும் அவா் கூறினாா்.
இந்தச் சூழலில், ஈரான் அரசுத் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த வெளியுறவுத் துறை அமைச்சா் அப்பாஸ் அராக்சி, ‘அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சு நடத்த எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. எந்தக் காலக்கெடுவும் நிா்ணயிக்கப்படவில்லை. எங்கள் தரப்பில் உறுதிமொழி எதுவும் அளிக்கப்படவில்லை. அமெரிக்காவின் ராணுவத் தலையீடு, புதிய பேச்சுவாா்த்தைகளுக்கான சாத்தியக்கூறுக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இப்போதைக்கு பேச்சுவாா்த்தை கிடையாது’ என்றாா்.