பணியிடமாறுதல் கலந்தாய்வு: 4,000 அரசு மருத்துவா்கள் விரும்பிய இடங்களைத் தோ்வு ச...
அதென்ன 'ஒய்' பிரிவு பாதுகாப்பு?
இந்தியாவில், குடியரசுத் தலைவர் தொடங்கி, நாட்டின் மிக முக்கிய பதவியை வகிப்பவர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலருக்கும் பல வகையான பாதுகாப்புகள் வழங்கப்படுகின்றன.
ஒருவருக்கு எந்தவிதமான பாதுகாப்பு வழங்குவது என்பது அவர் வகிக்கும் பதவி மற்றும் அவருக்கு இருக்கும் அச்சுறுத்தல் போன்றவற்றை அடிப்படையாக வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது.
நாட்டிலேயே மிக முக்கிய பாதுகாப்பு என்றால் அது சிறப்புப் பாதுகாப்புக் குழு எனப்படும் எஸ்பிஜி பாதுகாப்புத்தான். இதுதான் நாட்டின் குடியரசுத்தலைவருக்கு அளிக்கப்படும். 180 வீரர்களைக் கொண்ட மெய்க்காவலர் படைப்பிரிவாகும் இது.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலைக்குப் பிறகுதான், இந்த முக்கியத்துவம் வாய்ந்த எஸ்பிஜி பாதுகாப்புப் படை உருவாக்கப்பட்டது. அதுபோல, பிரதமர் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் இந்த பாதுகாப்புதான் அளிக்கப்படும். துணை ராணுவப் படையிலிருந்து சிறப்புப் பயிற்சி பெற்ற வீரர்களைக் கொண்டது இப்படை. தற்போது இப்படையில் மூன்று ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் உள்ளனர்.
அடுத்து இசட் பிளஸ் பாதுகாப்பு..
பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல்வேறு படைகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களால் அமைக்கப்பட்டிருப்பது இசட் பிளஸ் பாதுகாப்புப் படை. முன்னாள் தலைவர்களுக்கும், மாநில முதல்வர்களுக்கும் இந்தப் பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்படுகிறது.
ஒரு தலைவருக்கு, குண்டு துளைக்காத வாகனங்களுடன் 50க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தப் பிரிவில் பணியாற்றுவார்கள்.
பிறகு இசட் பிரிவு
தேசிய பாதுகாப்புப் படையில் இருக்கும் வீரர்கள் ஆறு பேரும், காவல்தறையினர் 22 பேரும் இணைந்து அளிக்கப்படும் பாதுகாப்பு இசட் பிரிவு. உளவுத் துறையின் பரிந்துரையின்படி, உயிருக்கு ஆபத்து இருக்கும் முக்கிய பிரமுகர்களுக்கு இந்த பாதுகாப்பு அளிக்கப்படும். இந்த பாதுகாப்பைப் பெற்றவர்களுக்கு அதிகபட்சம் 3 வீரர்கள் ஆயுதத்துடன் எப்போதும் அவருடன் இருப்பார்கள். மாநிலத்துக்கு ஒரு சிலர்தான் இந்தப் பாதுகாப்பைப் பெற்றிருப்பார்கள்.
அடுத்து வருவது ஒய் பிளஸ் பாதுகாப்பு
சில முக்கிய தலைவர்களுக்கு தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். இவர்களது வீட்டுக்கு 6 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்புப் பணியாற்றுவார்கள். உதாரணமாக நமது நாட்டில் கங்கனா ரனாவத்துக்கு இந்தப் பாதுகாப்புத்தான் வழங்கப்பட்டுள்ளது.
ஒய் பிரிவு பாதுகாப்பு (விஜய்க்கு வழங்கப்பட்டிருப்பது)
தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒன்று அல்லது இரண்டு வீரர்கள் மற்றும் காவல்துறையினர் என மொத்தம் 8 பேர் கொண்டதாக இப்பாதுகாப்பு அமைந்துள்ளது. இந்த பாதுகாப்பானது ஒருவர் எந்த மாநிலத்தில் இருக்கிறாரோ, அங்கு மட்டுமே வழங்கப்படும்.
தற்போது நடிகரும், தவெக தலைவருமான விஜய்க்கு, ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. எக்ஸ் பக்கத்தில் விஜய்க்கு எதிராக வந்த சில கருத்துகளால், இந்த பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில்லாமல், எக்ஸ் பிரிவும் உள்ளது. இதில், தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் இடம்பெறாமல், காவல்துறையினர் மட்டுமே இருப்பர்.