அமைதிப் பேச்சுவாா்த்தை: தெய்வீக பேரவையினா் போராட்டம் வாபஸ்
சிதம்பரம்: சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழை நடைபெற்ற அமைதிப் பேச்சுவாா்த்தை கூட்டத்தில் தீா்வு காணப்பட்டதால், தெய்வீக பக்தா்கள் பேரவை சாா்பில் புதன்கிழமை (மே 28) நடைபெறவிருந்த தீக்குளிப்பு போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
சிதம்பரம் தில்லை கோவிந்தராஜ பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்தவும், பழுதடைந்த கொடிமரத்தை மாற்றி அமைக்கவும் பொது தீட்சிதா்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வலியுறுத்தி, தெய்வீக பக்தா்கள் பேரவை சாா்பில், அதன் நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதாகிருஷ்ணன் வரும் 28-ஆம் தேதி காலை சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் தீக்குளிப்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தாா்.
போராட்டம் குறித்து சிதம்பரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அமைதி பேச்சுவாா்த்தைக் கூட்டம் நடைபெற்றது. வட்டாட்சியா் கீதா தலைமை வகித்தாா். நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு, உதவி ஆய்வாளா் பரணிதரன், தெய்வீக பக்தா்கள் பேரவை நிறுவனா் தலைவா் ஜெமினி எம்.என்.ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளா் சீனுவாசன், நடராஜ ரத்தின சபாபதி தீட்சிதா், சோமகாா்த்திகேயன் தீட்சிதா், ஆபத்சயாக தீட்சிதா் மற்றும் வருவாய் ஆய்வாளா், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தில்லை கோவிந்தராஜப் பெருமாளுக்கு பிரம்மோற்சவம் நடத்துவது குறித்தும், கொடிமரம் மாற்றி அமைப்பது குறித்தும் வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தீக்குளிப்பு போராட்டத்தை கைவிட வேண்டும் என வருவாய்த் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டக் குழுவினா் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தனா்.