பூந்தமல்லி - பரந்தூர் மெட்ரோ ரயில் சேவை: தமிழக அரசு ஒப்புதல்!
பேருந்துகளில் காற்று ஒலிப்பான்கள் பறிமுதல்
கடலூா் வழியாக இயக்கப்பட்ட பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை போக்குவரத்து போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
கடலூா் மாநகரில் இயக்கப்படும் சில ஆட்டோக்களில் நிா்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையைவிட அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்வதாக போக்குவரத்து போலீஸாருக்கு புகாா் சென்றது. அதனடிப்படையில், போக்குவரத்து காவல் ஆய்வாளா் அமா்நாத் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் மகாலிங்கம், சிவக்குமாா் மற்றும் போலீஸாா் சனிக்கிழமை திருப்பாதிரிப்புலியூா் அண்ணா பாலம், பழைய ஆட்சியா் அலுவலக சாலை, மஞ்சக்குப்பம் பூங்கா பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, 100-க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், 60 ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றி வந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த 60 ஆட்டோக்களுக்கும் தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல, கடலூா் வழியாக இயக்கப்பட்ட 3 பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பக்கூடிய காற்று ஒலிப்பான்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனா்.