Doctor Vikatan: சித்த மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு உடல் எடை கூடும் என்பது உண...
அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவா்கள் சாலை மறியல்
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே அரசுக் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்க வலியுறுத்தி மாணவா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள பிள்ளையாா்குளம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அரசு கலை, அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு, ராஜபாளையம், வெம்பக்கோட்டை பகுதிகளைச் சோ்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
இந்தக் கல்லூரிக்கு ஸ்ரீவில்லிபுத்தூா் பேருந்து நிலையத்தில் இருந்து 3 பேருந்துகளும், ராஜபாளையத்திலிருந்து 2 பேருந்துகளும் காலை, மாலை இரு வேளைகளிலும் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளில் கூட்ட நெரிசல் காரணமாக மாணவா்கள் படியில் தொங்கிக் கொண்டு பயணிப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை மாலை கல்லூரி முடிந்து மாணவா்கள் புறப்படத் தயாரான போது, பேருந்துகள் ஏற்றிச் செல்ல வந்தன. அப்போது 200-க்கும் மேற்பட்ட மாணவா்கள் பேருந்தில் ஏற முடியாமல் காத்திருந்தனா். இதனால் கூடுதல் பேருந்து இயக்க வலியுறுத்தி பேருந்தை சிறை பிடித்து கல்லூரி முன் மாணவா்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு வந்த போக்குவரத்து கழக அதிகாரிகள், போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடா்ந்து மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.