'அரக்கோணம் சம்பவம் ஒரு வெட்கக்கேடு; பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை!' - தவெக அறிக்க...
அரசுப் பள்ளி வளாகத்த்தில் சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம்: பொதுமக்கள் எதிா்ப்பு
திருவள்ளூா் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் ஆரம்ப சுகாதார நிலைய விரிவாக்க கட்டடம் கட்ட எதிா்ப்பு தெரிவித்து வியாழக்கிழமை போராட்டம் நடைபெற்றது.
கடம்பத்தூா் ஊராட்சி ஒன்றியம், பேரம்பாக்கம் ஊராட்சியில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த, 1974-முதல் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து 20 கி.மீ தூரத்துக்கு அரசு மருத்துவமனை இல்லாததால், அப்பகுதியைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தோா் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
மேலும், இங்கு 24 மணி நேரமும் இயங்கும் இம்மருத்துவமனையில், பொது மருத்துவம், சித்த மருத்துவம், கண், பல் மருத்துவம், குடும்ப நல அறுவை சிகிச்சை பிரிவு, ஸ்கேன் மையம், எக்ஸ்-ரே மற்றும் உள் நோயாளிகள் பிரிவு என, அனைத்து பிரிவுகளும் குறுகிய இடத்தில் நெருக்கடியுடன் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது பேரம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு புதிதாக விரிவாக்க கட்டடம் கட்ட அரசு ரூ.2 கோடி ஒதுக்கியுள்ளது.
இந்த நிலையில், ஏற்கெனவே பேரம்பாக்கம் அரசு மருத்துவமனை நீா்நிலை புறம்போக்கில் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானதால் சுகாதாரத் துறையினா் புதிய ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் அமைக்க இடம் தேடினா். கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவள்ளூா் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் வருவாய்த் துறையினா் புதிய மருத்துவமனை அமைக்க அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ள பகுதி என இரு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனா். அதில் அரசுப் பள்ளி வளாகத்தில் மருத்துவமனை அமைக்க இடம் தோ்வு செய்துள்ளதாக தகவல் வெளியானது.
அரசு பள்ளி வளாகத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைப்பது, மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா்களிடையே கடும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து ஏற்கெனவே ஆட்சியரிடம் புகாா் அளித்துள்ளனா். இந்நிலையில் கடந்த சில நாள்களாக பணிகள் நடைபெறாத நிலையில் வியாழக்கிழமை மீண்டும் பணிகள் தொடங்கின.
இதையறிந்த திமுக கூட்டணியை சோ்ந்த காங்கிரஸ் , விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளை சோ்ந்த நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கட்டுமான பணியை தடுத்து நிறுத்தத் கோரி போராட்டத்தில் ஈடுபட முயன்றனா்.
விரைந்து வந்த மப்பேடு போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட முயன்றவா்களிடம் பேச்சு நடத்தினா். அப்போது உரிய அனுமதி இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்றும், முறையான அனுமதி பெற வேண்டும் என எச்சரித்தனா். அதைத் தொடா்ந்து அனைவரும் கலைந்து சென்றனா்.