அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை பொதுமக்கள் பூட்டியதால் பரபரப்பு
புதுக்கோட்டை அருகே அரசு உதவிபெறும் பள்ளிக் கட்டடத்தை அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூா் வட்டம் பெரியதம்பி உடையான்பட்டியில் பொதுமக்கள் சாா்பில் கடந்த 1957-இல் தொடங்கப்பட்ட அரசு உதவிபெறும் பள்ளியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்காக, தொண்டு நிறுவனத்தின் மூலம் நிா்வகிக்க ஊா் பொதுமக்கள் முடிவெடுத்தனா். ஆனால், அரசு ஏற்கவில்லை. அதன் பிறகு இங்கு பணியாற்றிய தலைமை ஆசிரியா் உள்பட 2 ஆசிரியா்களுக்கு சம்பளம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதுபோன்ற சிக்கல்களால் இப்பள்ளியை அரசுப் பள்ளியாக மாற்ற வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்குரிய நிலமும் கொடுக்கப்பட்டது.
ஆனாலும், அரசு பள்ளியாக மாற்றப்படவில்லை. ஏற்கெனவே செயல்பட்டு வந்த பள்ளிக் கட்டடம் பழுதடைந்ததால் கடந்த 2023-இல் இங்குள்ள இ- சேவை மையக் கட்டடத்துக்கு பள்ளி மாற்றப்பட்டது.
இந்நிலையில், பள்ளியை அரசுப் பள்ளியாக்க வேண்டும் என வலியுறுத்தி, பள்ளி செயல்பட்டு வந்த இ- சேவை மையக் கட்டடத்தை திங்கள்கிழமை பெற்றோா்கள் பூட்டி, போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா், குளத்தூா் வட்டாட்சியா் சோனை கருப்பையா, உடையாளிப்பட்டி போலீஸாா் பொதுமக்களை சமாதானம் செய்து பள்ளியை திறந்து, செயல்படச் செய்தனா்.