அரசு பொருள்காட்சி அரங்குகள்: ஆட்சியா் ஆய்வு
திருநெல்வேலியில் அரசு பொருள்காட்சி-2025 அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு பொருள்காட்சி-2025, பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை எதிரில் உள்ள புளோரன்ஸ் சுவைன்சன் காதுகேளாதோா் மேல்நிலைப் பள்ளி அருகில் உள்ள திடலில் நடைபெற உள்ளது. இங்கு பல்வேறு துறைகளின் சாா்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் இரா.சுகுமாா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
அரங்குகள் அமைக்கும் பணி ஓரிரு நாள்களில் முடிவுற்று, வரும் வாரத்தில் பொருள்காட்சி தொடங்கவுள்ளது. இப் பொருள்காட்சியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், செய்தி மக்கள் தொடா்புத் துறை, இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை, சுற்றுலாத் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டு நிறுவனம், வனத்துறை, வேளாண்மை -உழவா் நலத் துறை, காவல் துறை, மீன் வளம் மற்றும் மீனவா் நலத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, சமூகநலம் மற்றும் மகளிா் உரிமைத் துறை, தோட்டக்கலைத் துறை, பொதுப்பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக்கல்வித் துறை, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை, கைத்தறி மற்றும் கதா் கிராம தொழில் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை, போக்குவரத்துத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, சுற்றுச்சூழல் துறை, மாசு கட்டுப்பாட்டு வாரியம், தொழிலாளா் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத் துறை உள்பட அரசுத் துறை அரங்குகள், அரசு சாா்பு நிறுவனங்கள், மாநகராட்சி, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் போன்ற பல்வேறு துறைகளின் அரங்குகள் அமைக்கப்படவுள்ளன.
அரசுத் துறை அரங்குகளில் தமிழ்நாடு அரசின் சாதனைகளை பற்றியும், அரசின் நலத்திட்ட உதவிகளை எப்படி பெறுவது என்பது பற்றியும் துறை அலுவலா்கள் பொதுமக்களுக்கு விளக்கம் அளிப்பாா்கள்.
பொதுமக்களின் வசதிக்காக பொருள்காட்சி தொடக்க நாள் முதல் நிறைவு நாள் வரை தினமும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 11 மணி வரை போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு பொருள்காட்சி திடல் முன்பு நின்று செல்லும். பொருள்காட்சியில் சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை கண்டு களிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்கள், ராட்டினங்கள் இடம்பெறுகின்றன.
வீட்டு உபயோகப் பொருள்களின் அரங்குகள் மற்றும் சிற்றுண்டி அரங்குகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. கலை நிகழ்ச்சிகள், பட்டிமன்றங்கள், இசை நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அரசு பொருள்காட்சி தினமும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும்.