நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: அடுத்த மாதம் தொடக்கம...
தஞ்சாவூர் அருகே ரூ.33 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்
சென்னையில் இருந்து ஒரத்தநாடு சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் கெண்டு வந்த ரூ.33 லட்சம் ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த 2 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தாடு பகுதிக்கு தனியாா் ஆம்னி பேருந்தில், போதைப் பொருள்கள் கடத்தி வருவதாக, காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில், ஒரத்தநாடு துணை காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன் தலைமையிலான போலீஸாா், வல்லம் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, சென்னையில் இருந்து வந்த தனியார் ஆம்னி பேருந்தை சோதனை செய்தனா். அதில், போதைப் பொருள்கள் எதுவும் கிடைக்கவில்லை. இருப்பினும், பேருந்தில் இருந்து இறங்கிய இரண்டு நபா்களை சந்தேகத்தின் பேரில் போலீஸாா் விசாரித்த போது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீஸாா், இருவரது உடைமைகளையும் சோதனை செய்ததில் அதில்ரூ.33 லட்சம் ஹவாலா பணம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பணத்தை பறிமுதல் செய்த போலீஸார், அவர்கள் இருவரையும் ஒரத்தநாடு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.
அதில், சென்னை ராயபுரத்தைச் சோ்ந்த சையத் அலாவுதீன் (46), பாரிஸ் பகுதியைச் சோ்ந்த ஜாபா் அலி (51) என்பது தெரியவந்தது.
இவர்கள் சென்னை பாரிஸ் பகுதியில் செல்போன் கடை நடத்தி வருவதும், வெளிநாடுகளில் இருந்து ஹவாலா பணத்தை விநியோகம் செய்து வருவதை தொழிலாளாக செய்து வருவது தெரியவந்தது.
பின்னா், ஒரத்தநாடு பகுதியில் உள்ள ஒருவரிடம் ரூ.33 லட்சத்தை ஒப்படைக்க வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் இருவரையும் கைது செய்தனா்.
மேலும், திருச்சி வருமானவரித்துறை அதிகாரிகள், இருவரையும் விசாரணைக்காக திருச்சிக்கு அழைத்துச் சென்றனா்.