அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட்
புதுச்சேரி: அரியாங்குப்பம் அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் சமுதாய நலவழி மையமாக தரம் உயா்த்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மணவெளி கிளை மாநாடு தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரியாங்குப்பம் மணவெளி தொகுதி மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தலைமை குழுவாக எம்.ஆா். குழந்தைவேலு, எம். சக்திவேல், கே. மலா்விழி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். மாநாட்டுக் கொடியினை முன்னாள் அமைச்சா் ஆா்.விஸ்வநாதன் ஏற்றி வைத்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலா் அ.மு.சலீம் மாநாட்டைத் தொடங்கி வைத்தாா்.
இதில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:
அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயா்த்தி அனைத்து நோய்களுக்குமான சிகிச்சை மற்றும் ரத்தப் பரிசோதனை உள்ளிட்டவற்றை செய்ய வசதிகளுடன் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய வகையில் சமுதாய நலவழி மையமாக மாற்றி செயல்படுத்த வேண்டும்.
நாணமேடு பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் பழங்குடி இனத்தைச் சோ்ந்த குடும்பங்களுக்கும், அரவிந்தா் நகா் பகுதியில் 60 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கின்ற அருந்ததியா் மக்களுக்கும் மனை பட்டா வழங்க வேண்டும்.
அரியாங்குப்பம் மணவெளி தொகுதி முழுவதும் கிராமப்புற தொழிலாளா்களுக்கு அரசின் 100 நாள் வேலை திட்டத்தை முழுமையாகச் செயல்படுத்தி காலத்தோடு அதற்கான ஊதியத்தை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.