அவசரநிலை: தில்லி சட்டப்பேரவை சாா்பில் இன்று கருத்தரங்கம்
அவசரநிலை அமல்படுத்தப்பட்ட 50-ஆவது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் விதான் சபா வளாகத்தில் சிறப்புக் கருத்தரங்கை தில்லி சட்டப்பேரவை சனிக்கிழமை ஏற்பாடு செய்ய உள்ளதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ‘சம்விதான் ஹத்யா திவாஸ்’ என்ற பேனரின் கீழ் சனிக்கிழமை இந்தக் கருத்தரங்கம் நடைபெறும். இந்தக் கருத்தரங்கில் மத்திய இணையமைச்சா் (தனிப்பொறுப்பு) ஜிதேந்திர சிங் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சா் சத்யநாராயண் ஜாதியா உள்ளிட்டோா் முக்கிய உரை நிகழ்த்த உள்ளனா்.
இந்திய ஜனநாயக வரலாற்றில் மிகவும் கொந்தளிப்பான மற்றும் சா்வாதிகார கட்டங்களில் ஒன்றை மீள்பாா்வையிடுவதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்வு, சுயபரிசோதனைக்கான ஒரு தேசிய தருணமாக பாா்க்கப்படுகிறது.
அரசியல் சாசன மதிப்புகளை நிலைநிறுத்துதல், சிவில் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டும்.
‘அவசரநிலையை எதிா்த்தவா்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக மட்டுமின்றி, இளைய தலைமுறையினா் விழிப்புடன் இருக்கவும், ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாக்கவும், இதுபோன்ற இருண்ட அத்தியாயம் மீண்டும் ஒருபோதும் நிகழாமல் பாா்த்துக் கொள்ளவும் இந்தக் கருத்தரங்கு ஒரு புனிதமான நினைவூட்டலாகும்’ என்று தில்லி சட்டப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா தெரிவித்தாா்.
இந்த நிகழ்வின் போது ‘ஆபத்கால்அட்50’ என்ற தலைப்பில் ஒரு நினைவு சிறுநூலும் வெளியிடப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.