காணாமல்போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் அழுகிய உடல் குளத்தில் கண்டெடுப்பு
ஒரு வாரமாக காணாமல் போன எய்ம்ஸ் எலக்ட்ரீஷியனின் உடல், வசந்த் குஞ்ச் அருகே உள்ள ஒரு குளத்தில் பாதி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக போலீஸாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து காவல்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது: ரங்புரி பஹாரி பகுதியில் உள்ள இந்தா் முகாமில் வசித்து வந்த அனில் குமாா் (32), அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (எய்ம்ஸ்) எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தாா். அவா் ஜூன் 20-ஆம் தேதி காணாமல் போனாா். இது குறித்து அவரது குடும்பத்தினா் மறுநாள் புகாா் அளித்தனா்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் அந்த வழியாகச் சென்ற ஒருவா் குளத்தில் அவரது உடலைக் கண்டாா். சிறிது நேரத்திலேயே, வசந்த் குஞ்ச் தெற்கு காவல் நிலையத்திற்கு இது குறித்து பிசிஆா் அழைப்பு வந்தது.
ஒரு போலீஸ் குழு சம்பவ இடத்திற்குச் சென்று, இந்தா் முகாமில் உள்ள பீா் பாபா அருகே உள்ள ஒரு குளத்தில் மிதந்த பாதி நிலையில் அழுகிய உடலைக் கண்டுபிடித்தது.
அனில் குமாருக்கு மனைவி மற்றும் ஆறு வயது மகள் உள்ளனா். அவரது மரணத்திற்கான சூழ்நிலைகளைக் கண்டறிய மேலும் விசாரணை நடந்து வருகிறது என்று காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.ந்