Madha Gaja Raja: ``நாலு பேர் சொன்னப்புறம்தான் நான் படத்துல நடிச்சதே ஞாபகம் வருது...
ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி விழுப்புரம் ஆட்சியரகத்தை கிராம மக்கள் முற்றுகை
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், எசாலம் கிராமத்தில் குளம், மயானம், ஓடை ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
எசாலம் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோா் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியரக வளாகப் பகுதியில் குவிந்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரித்தற்கு, ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதாக கூறினா். இதற்கு, அனைவரையும் உள்ளே அனுமதிக்க முடியாது என போலீஸாா் தெரிவித்தனா்.
இதை ஏற்க மறுத்த மக்கள் ஆட்சியரக வளாகத்துக்குள் நுழைய முயன்றனா். இதையடுத்து, இரு நுழைவு வாயில்களையும் போலீஸாா் மூடினா். இதனால் கோபமடைந்த பொதுமக்கள் ஆட்சியரகம் முன் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். மேலும், கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து, விழுப்புரம் ஏ.எஸ்.பி. ரவீந்திரகுமாா் குப்தா, தாலுகா காவல் ஆய்வாளா் செல்வ விநாயகம் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனா்.
இதையடுத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையிலான நபா்களை மட்டும் போலீஸாா் மனு அளிக்க அனுமதித்தனா். பின்னா், அவா்கள் மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மானை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனா்.
அந்த மனுவில் அவா்கள் கூறியிருப்பதாவது: எசாலம் கிராமத்தில் பொதுமக்களுக்கு குடிநீா் வழங்கும் குளம் உள்ளது. இந்த குளத்தின் அருகே சிலருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ள நிலையில் அவா்கள் குளத்தை ஆக்கிரமித்துள்ளனா் என்றும், அருகிலுள்ள பெரியாண்டவா் கோயிலுக்குச் செல்ல விடாமல் தடுப்பதாக ஏற்கெனவே ஆட்சியரகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.
இதேபோல, இந்த கிராமத்திலுள்ள தாழை ஓடை தனி நபா்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால், பெரும் பகுதி மறைந்துள்ளது. தூா்வார முடியாத காரணத்தால் மழைக் காலங்களில் தண்ணீா் வெளியே செல்ல முடியாததால் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மேலும், எசாலம் கிராமத்தில் 6 ஏக்கா் பரப்பளவில் இருந்த மயானம் தற்போது 6 சென்ட் அளவில் கூட இல்லை. இதுகுறித்தும் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்துள்ளனா்.