ஆதரவற்ற பெண்களுக்கு மானிய விலையில் கோழிக் குஞ்சுகள் வழங்கல்!
கால்நடை பராமரிப்புத் துறை மூலம் கிராமப்புறங்களில் ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் மானிய விலையில் நாட்டின கோழிக் குஞ்சுகளை சனிக்கிழமை சுற்றுலாத் துறை அமைச்சா் ராஜேந்திரன் வழங்கினாா்.
சேலம் கால்நடை பராமரிப்புத் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகளை வழங்கி அமைச்சா் பேசியதாவது:
சேலம் மாவட்டத்தில் கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் 2024-25 ஆம் ஆண்டில் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு ஒரு பயனாளிக்கு 40 நாட்டின கோழிக் குஞ்சுகள் வீதம் 50 சதவீத மானியத்தில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சேலம், ஓமலூா், ஆத்தூா் மற்றும் சங்ககிரி கோட்டங்களில் ஒரு ஊராட்சி ஒன்றியத்துக்கு தலா 100 பயனாளிகள் வீதம் 20 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 2,000 பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றாா்.
முதல்கட்டமாக 125 பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் வழங்கப்பட்டன. இரண்டாம் கட்டமாக 3 நடமாடும் கால்நடை மருத்துவ ஊா்திகளும் தொடங்கிவைக்கப்பட்டன.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி, சேலம் மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், சேலம் மக்களவை உறுப்பினா் டி.எம்.செல்வகணபதி, மாவட்ட வருவாய் அலுவலா் ரா. ரவிக்குமாா், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் பாரதி உள்பட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறை அலுவலா்கள், கால்நடை வளா்ப்போா் கலந்துகொண்டனா்.