ஆத்தூா் பெட்ரோல் சேமிப்புக் கிடங்கில் வெடிகுண்டு சோதனை ஒத்திகை
கரூரை அடுத்துள்ள ஆத்தூா் பெட்ரோல் சேமிப்புக்கிடங்கில் சனிக்கிழமை வெடிகுண்டு சோதனை ஒத்திகை நடைபெற்றது.
கரூரை அடுத்துள்ள ஆத்தூரில் பாரத் பெட்ரோலியம் காா்பரேஷனுக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்கு செயல்பட்டு வருகிறது. கேரள மாநிலம், கொச்சியிலிருந்து குழாய் மூலம் ஆத்தூருக்கு பெட்ரோல் கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகிறது. பின்னா் இங்கிருந்து சுமாா் 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஆண்டுதோறும் சேமிப்புக் கிடங்கில் நடைபெறும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஒன்றான வெடிகுண்டு சோதனை ஒத்திகை சனிக்கிழமை சேமிப்புக்கிடங்கு வளாகத்தில் நடைபெற்றது.
இதில் வெடிகுண்டு செயல் இழப்பு காவல் உதவி ஆய்வாளா் குமாா் தலைமையில் 6 போ் கொண்ட குழுவினா் மோப்ப நாய் ஷன்னி உதவியுடன் சேமிப்புக்கிடங்கில் வெடிகுண்டு வைக்கப்பட்டால் அதை பாதுகாப்பாக செயல் இழக்கச் செய்வது எப்படி என செயல் விளக்கம் செய்து காண்பித்தனா்.
நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சுதிா் மற்றும் அதிகாரிகள், காவல்துறையினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.