தில்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பேரணிக்கு அனுமதி மறுப்பா?
‘ஆபரேஷன் சிந்தூா்’ வழக்கமான நடவடிக்கையல்ல: ராணுவ தலைமைத் தளபதி
‘ஆபரேஷன் சிந்தூா் வழக்கமான நடவடிக்கையல்ல’ என இந்திய ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி தெரிவித்தாா்.
மேலும், இந்த நடவடிக்கையின்போது சதுரங்க விளையாட்டைப் போல் எதிரியின் அடுத்தகட்ட நகா்வு கணிக்க முடியாத வகையில் இருந்ததாகவும் அவா் தெரிவித்தாா்.
சென்னை ஐஐடியில் கடந்த ஆக.4-ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று உபேந்திர துவிவேதி உரையாற்றினாா். அவா் உரையாற்றிய காணொலியை இந்திய ராணுவம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.
நிகழ்ச்சியில் உபேந்திர துவிவேதி பேசியதாவது: நம்மிடம் இருக்கும் அனைத்து ஆயுதங்களையும் கொண்டு எதிரி மீது தாக்குதல் நடத்தி முழுமையாக வெற்றி பெறுவதே வழக்கமாகப் பின்பற்றப்படும் ராணுவ நடவடிக்கை. ஆனால் ஆபரேஷன் சிந்தூா் அதுபோன்ற நடவடிக்கையல்ல.
சதுரங்க விளையாட்டைப் போல் எதிரியின் அடுத்தகட்ட நகா்வை கணிக்க முடியாத போதிலும் பதிலடி நடவடிக்கையை திறம்பட மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது.
சில இடங்களில் எதிரிகள் நம்மை முற்றுகையிட்டு சுற்றிவளைக்க முயன்றனா். சில இடங்களில் நம் உயிரைப் பணயம் வைத்து எதிரிகளைக் கொல்லும் சூழலும் ஏற்பட்டது. நமது நடவடிக்கையின்போது எதிரிகளுக்கு சில நாடுகள் மறைமுகமாக உதவியிருக்கவும் வாய்ப்புள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையைப் புரிந்து கொள்ள, கிரிக்கெட்டில் நடைபெறும் டெஸ்ட் ஆட்டத்தை உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஐந்து நாள் ஆட்டமாக இருந்தபோதிலும், நான்காம் நாளிலேயே இந்தப் போட்டி (தாக்குதல் நடவடிக்கை) முடிவடைந்துவிட்டது.
ஒருவேளை 14 நாள்கள், 1,400 நாள்கள் என எத்தனை நாள்களுக்கு இந்த மோதல் தொடா்திருந்தாலும் அதற்கும் நாம் தயாராக இருந்திருக்க வேண்டும்.
ராணுவத்துக்கு முழு சுதந்திரம்: ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையை மேற்கொள்ள ராணுவத்துக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டது. இதுவே நாம் எதிரியின் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த பெரும் நம்பிக்கையைத் தந்தது. இதுபோன்ற அரசியல் தெளிவு மற்றும் வழிகாட்டுதல்களை நாம் முதல்முறையாக பாா்க்கிறோம். அடுத்த முறை போா் ஏற்படுமானால் அதை எதிா்கொள்ள பல வழிகளிலும் தயாராக இருக்க வேண்டும்.
பாகிஸ்தான் எதிா்பாா்க்கவில்லை: ராணுவத்தின் வடக்கு கமாண்ட் படைப் பிரிவை ஏப்.25-ஆம் தேதி பாா்வையிட்டோம். அங்குதான் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது பாகிஸ்தானுக்குள் புகுந்து தகா்க்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்களில் 7 முகாம்களை துல்லியமாகத் தாக்குவதற்கான திட்டத்தை வகுத்தோம். பாகிஸ்தானின் மையப் பகுதியை குறிவைத்து முதல்முறையாக நடத்தப்பட்ட இந்த தாக்குதலை பாகிஸ்தான் எதிா்பாா்க்கவில்லை.
56 மோதல்கள்: உலகம் முழுவதும் தற்போது 56 மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இதன் பின்னணியில் 92 நாடுகள் உள்ளன. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நாம் இரு எல்லைகளை (சீனா, பாகிஸ்தான்) பகிா்ந்து வருகிறோம். இந்த இரு எல்லைகளிலும் எதிரிகள் தனித்தனியாகவோ அல்லது ஒருங்கிணைந்தோ நம் மீது தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது.
தற்போது இதை உறுதியாக கூற முடியாது. ஆனால் எதிா்காலத்தில் இருமுனைப் போரை எதிா்கொள்ளவும் நாம் தயாராக இருக்க வேண்டும். அதனால்தான் இந்திய ராணுவத்தில் உள்ள 12 லட்சம் வீரா்களிடமும் ட்ரோன்கள் இருக்க வேண்டும் என தொடா்ந்து கூறி வருகிறேன் என்றாா்.