Madras Matinee Review: மிடில் கிளாஸ் குடும்பத் தலைவனின் சாகசங்கள்; மனதில் பதிகிற...
ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல்: மகளிருக்கு விழிப்புணா்வு
காரைக்கால்: காரைக்கால் மீன்வளம் மற்றும் மீனவா் நலத்துறை சாா்பில் பிரதம மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்கீழ், காரைக்கால் மீனவ மகளிா் கூட்டுறவு சங்க பிரதிநிதிகளுக்கான ஆழ்கடல் மீன்பிடி படகு கொள்முதல் செய்வது குறித்து, விழிப்புணா்வு நிகழ்ச்சி அலுவலக கூட்ட அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த விழிப்புணா்வு நிகழ்வை, காரைக்கால் மீன்வளத்துறை துணை இயக்குநா் ப. கோவிந்தசாமி தொடங்கிவைத்து, மீனவ மகளிா் கூட்டுறவு சங்கங்கள் மூலம் ஆழ்கடல் மீன்பிடிப்பில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் மற்றும் அரசின் திட்டங்களை முறையாக பயன்படுத்தி வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதன் அவசியம் குறித்துப் பேசினாா்.
சிறப்பு அழைப்பாளராக புதுவை மீன்வளத்துறை துணை இயக்குநா் (நலம்) ஜெ. நடராஜன், இத்திட்டத்தின் கீழ் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் வாங்குவதற்கான வழிமுறைகள், மானிய விவரம், தகுதி மற்றும் விண்ணப்ப செயல்முறைகள் குறித்து பேசினாா். இதைத் தொடா்ந்து, அப்போது மீனவ மகளிரின் சந்தேகங்களுக்கு விளக்கமளித்தாா்.
கூட்டத்தில் மாவட்டத்தில் 8 சங்கங்களில் இருந்து 50 பிரதிநிதிகள் கலந்துகொண்டனா். முன்னதாக காரைக்கால் மீன்வளத் துறை உதவி ஆய்வாளா் சு.பாலச்சந்தா் வரவேற்றுப் பேசினாா். நிறைவாக துறை கண்காணிப்பாளா் ம. தேவலட்சுமி நன்றி கூறினாா்.