ஆா்.புதுப்பட்டி கிளை நூலகத்தை புதுப்பிக்க வலியுறுத்தி போராட்டம்
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த ஆா்.புதுப்பட்டி பேரூராட்சி பகுதியில் செயல்படும் கிளை நூலகக் கட்டடம் சேதமடைந்த நிலையில் உள்ளதால், அதனை புதுப்பக்க வலியுறுத்தி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு கட்சி சாா்பில் புதன்கிழமை போராட்டம் நடைபெற்றது.
ஆா்.புதுப்பட்டி கிளை நூலகம் கடந்த 1969 ஆம் ஆண்டு முதல் சுமாா் 55 ஆண்டுகளுக்கு மேலாக ஓடுகளால் வேயப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டுவருகிறது. இந்த கட்டடத்தில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்துவிழும் நிலையில் உள்ளது. மேலும் ஓடுகள் விழும் நிலையில் கட்டடத்தில் மரங்கள் முளைத்தும், மழை நீரில் புத்தகங்கள் சேதமடையும் நிலையிலும் உள்ளது.
எனவே நூலக கட்டடத்தை புதுப்பிக்க வேண்டும் என நூலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் குடைபிடித்து புத்தகம் பயிலும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அக் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஏ.டி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற நூதனப் போராட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.