ஆ.ராசா முன் அடுக்கப்பட்ட புகார்கள்; "திமுகவில் இது சாதாரணம்" - என்ன சொல்கிறார் பெரம்பூர் எம்எல்ஏ?
தேர்தல் நடைமுறைகள் தொடங்க இன்னும் சில மாதங்களே இருக்கும் சூழலில் அரசியல் கட்சிகள் அதற்கு ஆயத்தமாகும் வகையில் வேலைகளை இப்போதே தொடங்கி விட்டன.
ஆளும் திமுகவில் மாவட்ட அளவில் கட்சியின் நடப்பு நிலவரத்தைக் கவனிக்கத் தொகுதிவாரியாக நிர்வாகிகள் கலந்துரையாடல் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் வடசென்னைக்குட்பட்ட பெரம்பூர், ராயபுரம், ஆர்.கே.நகர் தொகுதிகளுக்கான நிர்வாகிகள் கூட்டம் சில தினங்களுக்கு முன் நடந்தது. மேலிடப் பார்வையாளராக ஆ.ராசா கலந்து கொண்டார்.
இப்படியொரு கூட்டம் நடைபெறவிருக்கும் தகவலே சென்னை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் என்ற முறையில் பெரம்பூர் எம்.எல்.ஏ ஆர்.டி.சேகர் பெயரில்தான் அறிக்கையாக வெளியானது.
ஆனால் கூட்டத்தில் ஆர்.டி.சேகர் மீது அவ்வளவு குற்றச்சாட்டுகள் எனச் சொல்கிறார்கள் உடன்பிறப்புகள்.
'என்ன நடந்தது' எனக் கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரிடம் பேசினோம்.

''கட்சிக்காரங்க யாரையும் எம்.எல்.ஏ மதிக்கிறதில்லை. வட்ட அளவுல பதவியில இருக்கிறவங்க வீட்டு விசேஷம்னு கட்சித் தலைவர்கள் யாருக்காவது பத்திரிக்கை வைக்கணும்னு கேட்டா கூட 'பார்க்கலாம்'னு சொல்லித் தட்டிக் கழிச்சிடுறார்.
மாவட்டப் பொறுப்பாளரா இவர் இருக்கிறதால இவரைத் தாண்டி நேரடியா கட்சியின் சீனியர்களைச் சந்திச்சா அதுவும் பிரச்னையாகும்.
ஏரியாவுல கவர்ன்மென்ட் கான்ட்ராக்ட் வழக்கமா எடுக்கிற நம்ம கட்சியைச் சேர்ந்தவங்களுக்குக் கிடைக்காம அதிமுககாரங்களுக்கெல்லாம் கிடைக்குது.
தவிர, சில கட்சி வட்டச் செயலாளர்கள்கிட்ட ஜாதிய ரீதிய வேறுபாடு பார்க்கிறார். மொத்தத்துல சென்னை வடக்கு மாவட்ட திமுகவுல முக்கால்வாசிப் பேர் எம்.எல்.ஏ. மீது அதிருப்தியிலதான் இருக்காங்க. இவர் தலைமையில மறுபடியும் தேர்தலைச் சந்திக்கணும்னா அது ரொம்ப கஷ்டமான ஒரு முடிவா இருக்கும். கட்சிக்கும் அது நல்லதா இருக்காது. இப்படி எல்லாக் குற்றச்சாட்டையும் அவர் முன்னாடியேதான் ஆ.ராசாவும் அமர்ந்திருக்க நாங்க சொன்னோம்.

எல்லாத்தையும் கேட்டுகிட்ட ஆ.ராசா, இங்க நீங்க பேசுனதை எழுத்துபூர்வமா எழுதிக் கொடுங்க, நான் அறிக்கையா தலைமைக்கு அனுப்பிடுறேன்'னு சொன்னார்.
அடுத்த ரெண்டு நாள்ல ஆ.ராசா வீட்டுக்கே போய் எழுத்துபூர்வமாகவும் புகார் தந்துட்டு வந்திருக்கோம்'' என்றார்கள் அவர்கள்.
பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.சேகரிடமும் இது தொடர்பாகப் பேசிய போது,
''திமுக ஜனநாயக இயக்கம். அதனால இங்க இதெல்லாம் வழக்கமா நடக்கிறதுதான். அதாவது சாதாரணமானதுதான். கட்சியில் பொறுப்புல இருக்கிறவங்களுக்கு எதிரா பேச நிச்சயம் நாலு பேரு இருப்பாங்க.
அதனால இதுக்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. என்னைப் பொறுத்தவரை கட்சியின் தலைவரும் இளம் தலைவரான துணை முதல்வரும் என்ன சொல்றாங்களோ அதன்படி நடந்துட்டு வர்றேன்'' என்றார்.
'ஜாதிய ரீதியிலான கொடுமைங்கிற அளவுல எல்லாம் புகார்...' என நாம் முடிப்பதற்குள், 'அந்தப் புகார்களையெல்லாம் நான் மறுக்கிறேன். அதுல உண்மையில்லை' என முடித்துக் கொண்டார்.