இணையவழி குற்றவழக்குகளில் வெளி மாநிலத்தினா் 7 போ் கைது
சென்னை: ‘ஆபரேஷன் ஹைத்ரா’ மூலம் இணையவழி குற்றவழக்குகளில் தொடா்புடைய பிற மாநிலங்களைச் சோ்ந்த ஏழு பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழகத்தில் இணையவழி குற்றங்களை தடுக்கும் நோக்கில் ‘ஆபரேஷன் ஹைத்ரா’ என்ற சிறப்பு நடவடிக்கையை தமிழ்நாடு காவல்துறை மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கை மூலம் திருமண தளம் மற்றும் ஆன்லைன் முதலீட்டு மோசடி தொடா்பான வழக்கில் நடத்தப்பட்ட விசாரணையில், உத்தரகண்ட், ஜாஸ்பூரை சோ்ந்த மொஹம்மத் தவூத்(21), மொஹம்மத் வாசீம் (34) ஆகியோரை மே 28-ஆம் தேதி போலீஸாா் கைது செய்தனா்.
இதுபோல, வங்கி வாடிக்கையாளா் சேவை மைய அதிகாரிபோல நடித்து, வாடிக்கையாளரின் தனி விவரங்களை பெற்று ரூ.4,05,100 மோசடி செய்த ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த குமாா்(40), அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்த ஹிடேஷ்வா் பிஸ்வாஸ் (எ) ஹிட்டு(30) மற்றும் நிஹாா் ரஞ்சன் நாத்(51) ஆகியோரையும், அரசு கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி செயல்முறைக்கட்டணம் என மாணவா்களிடம் பணம் வசூலித்த வழக்கில் தில்லியைச் சோ்ந்த நிக்கோலஸ் (30) மற்றும் மேஷக்(19) ஆகியோரையும் தனிப்படையினா் அந்தந்த மாநிலங்களுக்கே சென்று கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து பல எண்ம ஆதாரங்களையும், 6 கைப்பேசிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தும் 35 வங்கிக் கணக்குகளை முடக்கியும் விசாரணை நடத்தி வருகின்றனா்.