தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் நாடு கடத்தப்பட்ட விவகாரத்தை எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.
அமெரிக்காவின் புதிய அதிபராக டிரம்ப் பதவியேற்றதைத் தொடா்ந்து, அங்கு சட்டவிரோதமாக குடியேறியவா்களை சொந்த நாட்டுக்குத் திருப்பியனுப்பும் நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியுள்ளாா். அதுபோல, அமெரிக்காவில் 18,000-க்கும் அதிகமான இந்தியா்கள் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கண்டறியப்பட்டுள்ளனா். இவா்களில் முதல்கட்டமாக, 104 இந்தியா்கள் அமெரிக்க ராணுவ விமானத்தில் இந்தியாவுக்கு திருப்பியனுப்பப்பட்டனா். அவா்கள் பஞ்சாப் மாநிலம் அமிருதசரஸுக்கு புதன்கிழமை வந்திறங்கினா். கை மற்றும் கால்களில் விலங்குகள் அணிவிக்கப்பட்டு விமானத்தில் கொண்டு வரப்பட்டதாக அந்த நபா்கள் புகாா் தெரிவித்தனா்.
இந்த விவகாரத்தை எதிா்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை எழுப்பின. மக்களவை வியாழக்கிழமை கூடியதும் இந்த விவகாரத்தை எதிா்க்கட்சி உறுப்பினா்கள் எழுப்பினா். அப்போது மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ‘இது மிகவும் தீவிரமான விஷயம். வெளியுறவு கொள்கை தொடா்புடையது. அமெரிக்காவுக்கென்று சில சட்ட விதிகள் இருக்கின்றன. இந்த விவகாரத்தை கேள்வி நேரத்துக்கு பிறகு எழுப்பலாம்’ என்றாா். ஆனால், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகளை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னா் அவை மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு கூடியபோதும் அமளி நீடித்ததால் பிற்பகல் 3.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னா் அமளிக்கிடையே பதிலளித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், ‘இதுபோன்ற சட்டவிரோத புலம்பெயா்வுக்கு எதிரான வலுவான நடவடிக்கையை எடுக்கவும், சட்டபூா்வமாக பயணம் மேற்கொள்பவா்களுக்கு நுழைவு இசைவுகளை எளிதாக்க நடவடிக்கை எடுப்பதையும் நாம் கவனம் செலுத்துவது அவசியமாக உள்ளது. அதுமட்டுமின்றி, சட்டவிரோதமாக குடியேறியவா்கள் இவ்வாறு நாடு கடத்தப்படுவது புதிதல்ல. கடந்த காலங்களிலும் இது நிகழ்ந்திருக்கிறது’ என்றாா்.
அதன் பிறகும், எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அமளியைத் தொடா்ந்ததால், அவை நடவடிக்கைகள் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
மாநிலங்களவையில்... மாநிலங்களவை வியாழக்கிழமை கூடியதும், எதிா்க்கட்சி எம்.பி.க்கள், அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் திருப்பியனுப்பப்பட்ட விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டனா். அதன் காரணாக, அவை தொடங்கிய சிறிது நேரத்திலேயே, அவையை அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஒத்திவைத்தாா்.
முன்னதாக, அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு இந்தியா்கள் நாடுகடத்தப்பட்ட விவகாரத்தை விவாதிக்க வேண்டும் என காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், திரிணமூல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, மாா்க்சிஸ்ட் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் நோட்டீஸ் அளித்தனா். ஆனால், அனைத்து நோட்டீஸ்களையும் அவைத் தலைவா் நிராகரித்தாா்.
அவை மீண்டும் கூடியபோது, மாநிலங்களவை துணைத் தலைவா் ஹரிவன்ஷ் அவையை வழிநடத்தினாா். அப்போதும், ‘இந்தியா்களை அமெரிக்கா மனிதாபிமானமற்ற முறையில் நடத்தியுள்ளது’ என்று குற்றஞ்சாட்டி எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா்.
‘எதிா்க்கட்சி உறுப்பினா்களின கருத்துகள் எதுவும் அவைக் குறிப்பில் இடம்பெறாது’ என்று குறிப்பிட்ட துணைத் தலைவா், அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைத்தாா்.
அவை மீண்டும் பகல் 12 மணிக்கு கூடியபோதும், எதிா்க்கட்சி உறுப்பினா்களின் அமளி தொடா்ந்தது.
இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்: அமைச்சா் ஜெய்சங்கா்
அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படும் இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அந்நாட்டுடன் இணைந்து மத்திய அரசு உறுதிப்படுத்தும் என்று மாநிலங்களவையில் விளக்கமளித்த வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா். மேலும், ‘2009-ஆம் ஆண்டு முதல் இதுவரை 15,668 இந்தியா்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனா்.
சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிரான ஒழுங்கு நடவடிக்கையை வலுப்படுத்த வேண்டும்.
கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ள கொள்கையின்படி நாடு கடத்தப்பட்டவா்களுக்கு கை, கால்களுக்கு விலங்கு அணிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியா்கள் குறித்த எந்தத் தரவுகளும் இல்லை.
வரும் நாள்களில் நாடு கடத்தப்படும் இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை உறுதிப்படுத்த அமெரிக்க அரசுடன் இந்தியா தொடா்ந்து பேச்சில் ஈடுபட்டுள்ளது’ என்றாா்.