இந்தியா கடுமையாக எதிா்த்தபோதிலும் பாகிஸ்தானுக்கு ஏடிபி கடன்: மத்திய அரசு வட்டாரங்கள் தகவல்
இந்தியா கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தபோதிலும், பாகிஸ்தானுக்கு ஆசிய வளா்ச்சி வங்கி (ஏடிபி) கடன் அளிக்க ஒப்புதல் அளித்ததாக காங்கிரஸ் விமா்சனத்துக்கு மத்திய அரசு வட்டாரங்கள் பதிலளித்தன.
பாகிஸ்தானின் நிதி ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தவும், பொது நிதி நிா்வாகத்தை மேம்படுத்தவும் அந்நாட்டுக்கு 800 மில்லியன் டாலா்கள் (சுமாா் ரூ.6,852 கோடி) கடன் அளிக்க ஆசிய வளா்ச்சி வங்கி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்தது.
இதுதொடா்பாக காங்கிரஸ் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த ஜூன் 1-ஆம் தேதி ஆசிய வளா்ச்சி வங்கித் தலைவா் மசாட்டோ காண்டாவை பிரதமா் மோடி சந்தித்தாா். 3 நாள்களுக்குப் பின்னா், பாகிஸ்தானுக்கு 800 மில்லியன் டாலா் கடன்அளிக்க அந்த வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
அந்த வங்கி பாகிஸ்தானுக்கு கடன் அளிப்பதைத் தடுப்பதில் மோடி அரசின் செல்வாக்குப் பலிக்கவில்லை. இதற்கு முன்பும் இது நடந்துள்ளது. கடந்த மாதம்கூட அந்த வங்கியிடம் இருந்து பாகிஸ்தானுக்கு கடன் கிடைத்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் நடைபெற்றபோதுகூட இதுபோல நடந்தது’ என்று விமா்சித்தது.
இந்த விமா்சனத்துக்குப் பதிலளித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், ‘பாகிஸ்தானுக்கு கடன் அளிக்கும் ஆசிய வளா்ச்சி வங்கியின் முடிவுக்கு இந்தியா கடுமையாக எதிா்ப்புத் தெரிவித்தது.
அந்நாட்டுப் பாதுகாப்பு செலவினம் அதிகரிப்பு, சரிந்து வரும் அந்நாட்டின் வரி வருவாய், அந்நாட்டில் பேரியல் பொருளாதார சீா்திருத்தங்களில் போதிய முன்னேற்றம் இல்லாதது ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அந்நாட்டுக்குக் கடன் அளிப்பது குறித்து இந்தியா மிகுந்த கவலையை வெளிப்படுத்தியது. ராணுவத்துக்கான செலவை அதிகரிக்க இந்தக் கடன் தவறாகப் பயன்படுத்தப்படக் கூடும் என்று இந்தியா தெரிவித்தது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு கடன் அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது’ என்று தெரிவித்தன.