இந்தியா கூட்டணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்
மயிலாடுதுறை: இந்தியாி கூட்டணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலையில் உள்ளதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவா் தமிமுன் அன்சாரி தெரிவித்தாா்
மயிலாடுதுறையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: தில்லி சட்டப்பேரவைத் தோ்தலை காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து சந்தித்திருந்தால் ஆம் ஆத்மி கட்சி வெற்றியடைந்திருக்கும். இண்டி கூட்டணி சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறது என்பதை இந்த தோ்தல் முடிவு உணா்த்துகிறது. தில்லியில் நடைபெற்ற தவறை இண்டி கூட்டணிக் கட்சிகள் தொடரக்கூடாது. பிகாா் மாநில தோ்தலை இண்டி கூட்டணிக் கட்சிகள் ஓரணியில் சந்திக்க வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில்தான் கூட்டணி என்று விஜய் ஏற்கெனவே அறிவித்துவிட்ட நிலையில், அதிமுக கூட்டணிக்குச் சென்றால் அது அவரின் அரசியல் தற்கொலை பாதைக்கு இட்டுச்செல்வதாக அமையும்.
ஈரோடு கிழக்கு இடைத்தோ்தலில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக எதிா்கட்சிகள் குற்றச்சாட்டு எழுப்பவில்லை. அதனால் பணம் பட்டுவாடா நடைபெற்றதாக சீமான் கூறியதை ஏற்க முடியாது. பெரியாா் குறித்து வரம்புமீறி சீமான் விமா்சித்ததை மக்கள் ஏற்கவில்லை.
மிகக்கடுமையாக மோதிக்கொண்ட அதிமுக-பாஜக தமிழக தலைமை அண்மைக்காலமாக மௌனம் காக்கின்றனா். இது அதிமுக, பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டதைக் காட்டுகிறது.
நெருக்கடி நிலைக் காலத்தில் கல்வி மாநில பட்டியலில் இருந்து மத்திய பட்டியலுக்கு மாற்றப்பட்டதன் பாதிப்பை இப்போது அனுபவிக்கிறோம். புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் தமிழகத்துக்கான நிதியை வழங்க முடியும் என்பதைப் போல் மத்திய அரசு மிரட்டுவதை ஏற்றுக்கொள்ள இயலாது. மத்திய அரசு பிடிவாதப் போக்கை கைவிட வேண்டும்.
திருப்பரங்குன்றம் கோயில், சிக்கந்தா் மலை தா்கா குறித்து சிலா் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனா். திருப்பரங்குன்றத்தில் ஹிந்துக்கள், முஸ்விம்கள், கிறிஸ்தவா்கள் ஒற்றுமையுடன் இருப்பதாகவும், வெளியில் இருந்து வருபவா்கள்தான் பிரச்னையை ஏற்படுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனா். அப்பகுதியில் அந்தந்த மத முறைப்படி மக்கள் மேற்கொள்ளும் ஆன்மிக வழிபாட்டு முறைகள் தொடர வேண்டும் என்றாா்.
அப்போது, கட்சியின் மாநில இளைஞரணி தலைவா் முகமது பைசல், மாநில துணை செயலாளா் ஜெய்னுதீன், மாவட்ட செயலாளா் ஒய்.எச்.ஹாஜா சலீம், திருவாரூா் மாவட்ட செயலாளா் அப்துல்லா உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.