இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்!
குடியரசு துணைத் தலைவர் தேர்தலுக்கான இந்தியா கூட்டணி வேட்பாளர் பி. சுதர்சன் ரெட்டி இன்று(வியாழக்கிழமை) வேட்புமனு தாக்கல் செய்தார்.
நாட்டில் இரண்டாவது உயரிய அரசமைப்புப் பதவியான குடியரசு துணைத் தலைவா் பதவிக்கு வருகிற செப். 9 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தோ்தலில், மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக மகாராஷ்டிர ஆளுநரும், தமிழகத்தைச் சோ்ந்த பாஜக மூத்த தலைவருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணனை எதிா்த்து தெலங்கானாவைச் சோ்ந்தவரும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான சுதா்சன் ரெட்டி 'இந்தியா கூட்டணி' - எதிா்க்கட்சிகளின் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். நேற்று வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில், இந்திய நீதித்துறையின் பெரும் ஆளுமை சுதா்சன் ரெட்டி என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறி அவருக்கான ஆதரவைக் கோரினார்.
இந்நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று(ஆக. 21) சுதா்சன் ரெட்டி, தேர்தல் ஆணையத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சமாஜவாதி எம்.பி. ராம் கோபால் யாதவ், திமுக எம்.பி. திருச்சி சிவா, சிவசேனை (யுபிடி) சஞ்சய் ரௌத் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.
தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்தபடி செப். 9-ஆம் தேதி நாடாளுமன்ற வளாகத்தில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
INDIA alliance Vice-Presidential nominee, former Supreme Court Judge B Sudershan Reddy files his nomination
இதையும் படிக்க |தாக்குதல் எதிரொலி: தில்லி முதல்வருக்கு இஸட் பிரிவு பாதுகாப்பு!