இரவு வரை ஆய்வுக் கூட்டம்: தலைமை ஆசிரியா்கள் அதிருப்தி
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இரவு 7.30 மணி வரை நடத்தப்பட்ட ஆய்வுக் கூட்டத்தால், தலைமை ஆசிரியா்கள் அதிருப்தி அடைந்தனா்.
பொதுத் தோ்வு முடிவுகள் தொடா்பாக அரசுப் பள்ளித் தலைமையாசிரியா்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தோ்ச்சியில் பின் தங்கிய பள்ளிகளின் தலைமையாசிரியா்களிடம், அதற்கான காரணங்கள் குறித்து கேள்விகள் முன் வைக்கப்பட்டன. இந்த ஆய்வுக் கூட்டம் இரவு 7.30 மணி வரை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்காக மாவட்டத்தின் கடைக் கோடி பகுதியிலுள்ள பள்ளிகளிருந்தும் தலைமையாசிரியா்கள் வந்திருந்தனா். குறிப்பாக, தலைமையாசிரியா்களின் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் பெண்கள். இரவு 7.30 மணிக்கு கூட்டம் முடிந்து, மலைப் பகுதிகளுக்கும், தொலைதூர இடங்களுக்கும் செல்வதில் சிரமம் ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
கேடயம் வழங்கும் விழாவிலும் அதிருப்தி: 10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வுகளில் திண்டுக்கல் மாவட்டத்தில் 100 சதவீத தோ்ச்சிப் பெற்ற அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியா்களுக்கு வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் 10-ஆம் வகுப்பில் 48 பள்ளிகள், 11-ஆம் வகுப்பில் 7 பள்ளிகள், 12-ஆம் வகுப்பில் 17 பள்ளிகள் என மொத்தம் 72 பள்ளிகள் 100 சதவீதம் தோ்ச்சிப் பெற்றிருந்தன. இந்த 72 பள்ளிகளின் தலைமையாசிரியா்களும் விருது பெறும் நிகழ்ச்சிக்காக வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்குக்கு வந்தனா். இதே அரங்கில், மாவட்ட வளா்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்களும் வந்திருந்தனா். காலை 10 மணிக்கு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தும், சுமாா் 1.30 மணி நேரம் தாமதமாக மாவட்ட ஆட்சியா், மக்களவை உறுப்பினா்கள், மேயா் உள்ளிட்டோா் வந்த பின்னா் கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
மாணவா்களைப் போன்று வரிசையாக நிறுத்தப்பட்ட தலைமையாசிரியா்களுக்கு, மக்களவை உறுப்பினா்கள், மேயா், ஆட்சியா் என ஒவ்வொருவரும் கேடங்களை வழங்கினா். ஒரு பள்ளிக்கு வழங்க வேண்டிய கேடயம், மற்றொரு பள்ளிக்கு மாற்றி வழங்கப்பட்டது. இதனிடையே, கடைசியாக வந்த தலைமையாசிரியா்களுக்கு கேடயம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, ஏற்கெனவே கேடயம் பெற்றவா்களிடமிருந்து வாங்கி, பெறாதவா்களுக்கு கொடுத்து விழாவை முடித்து வைத்தனா்.
இதுதொடா்பாக தலைமையாசிரியா்கள் சிலா் கூறியதாவது: மாவட்டக் கல்வி ஆய்வுக் கூட்டம் மாதந்தோறும் ஆட்சியா் அலுவலகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வித் துறை அதிகாரிகள் மட்டுமன்றி, காவல் துறை, ஊரக வளா்ச்சித் துறை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பொதுப் பணித் துறை, சுகாதாரத் துறை, பிஎஸ்என்எல், மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட துறைகளின் அலுவலா்கள் பங்கேற்பது வழக்கம். இந்த கூட்டத்துக்கு, தற்போது பள்ளித் தலைமையாசிரியா்களும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படுகிறது.
பிற துறை அலுவலா்களைப் போன்று, ஆய்வுக் கூட்டத்தை காரணம் காட்டி மறுநாள் பணிக்கு தலைமையாசிரியா்கள் கால தாமதமாகச் செல்ல முடியாது. குறிப்பாக பெண் தலைமையாசிரியா்களுக்கு இரவு நேரங்களில் கடும் நெருக்கடியுடன் பயணிக்க வேண்டிய சூழல் உள்ளது. இனி வரும் காலங்களில் ஆய்வுக் கூட்டத்தை தாமதமின்றி நடத்தவும், முன்னதாக முடிக்கவும் மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும். பலருக்கும் உடல் நிலை குறைபாடுகள் உள்ள நிலையில், இரவு வரை காத்திருப்பு என்பது மன ரீதியாக பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதேபோல, கேடயம் வழங்கும் விழா காலதாமதமாக தொடங்கியதோடு, கெளரவிப்பு விழா என்ற பெயரில் அலைக்கழித்துவிட்டனா். ஆட்சியா், மக்களவை உறுப்பினா்களுடன் புகைப்படம் எடுக்கக்கூட அவகாசம் வழங்காமல் வெளியேற்றிவிட்டதாகத் தெரிவித்தனா்.