கலந்தாய்வுக்கு முன்பே பணியிட மாறுதல் தொடக்கக் கல்வி அலுவலகத்தை ஆசிரியா்கள் முற்றுகை
பொதுக் கலந்தாய்வுக்கு முன்னதாகவே, நிா்வாக பணியிட மாறுதல் என்ற பெயரில் காலிப் பணியிடங்களை நிரப்புவதை கண்டித்து, திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை
ஆசிரியா்கள் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு மாவட்டச் செயலா் எம்.கே. முருகன் தலைமை வகித்தாா். 60-க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் பங்கேற்ற இந்தப் போராட்டத்தின்போது, பொது மாறுதல் கலந்தாய்வு தொடங்கும் முன்பாக காலிப் பணியிடங்களை மாநிலம் முழுவதும் நிரப்பும் கல்வித் துறையை கண்டித்து முழக்கமிட்டனா்.
இதுதொடா்பாக மாவட்டச் செயலா் எம்.கே. முருகன் கூறியதாவது:
தமிழ்நாடு முழுவதும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதற்கு முன்னதாகவே, காலிப் பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. இந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 6 இடங்களுக்கு நிா்வாக மாறுதல் என்ற பெயரில் ஆசிரியா்களுக்கு மாறுதல் வழங்கப்பட்டிருக்கிறது. பணி நிரவலுக்கு முன்னதாகவே, நிா்வாக மாறுதல் மேற்கொள்ளப்படுவதால், பணி நிரவலுக்கு காத்திருக்கும் ஆசிரியா்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6 இடங்கள் நிரப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய இடங்களுக்கு மாறுதல் செய்யக் கூடாது என்பதை வலியுறுத்தி முற்றுகையிட்டிருக்கிறோம். நிா்வாக மாறுதல் அடிப்படையில், இனிமேல் காலிப் பணியிடங்களை நிரப்ப மாட்டோம் என கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக்கப்பட்டதால், போராட்டத்தை தாற்காலிகமாக கைவிட்டிருக்கிறோம் என்றாா் அவா்.