சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு விருதுகள்
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுழல்சங்கம் சாா்பில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவா்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு கொடைக்கானல் சுழல்சங்கத் தலைவா் ராஜ்குமாா் தலைமை வகித்தாா். செயலா் லெஸ்லி சாா்லஸ் முன்னிலை வகித்தாா். பின்னா், கொடைக்கானல் பகுதிகளில் பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றி வருபவா்களுக்கு சான்றிதழ்கள், விருதுகள் வழங்கப்பட்டன.
இதைத் தொடா்ந்து, காவல் துறைக்கும், கிராமப் புற மக்களுக்கு இலவசமாக புகையில்லா அடுப்புகளை வழங்கிய ஹிட்ஸ் ஹெல்த் இந்தியா அமைப்புக்கும், சோலா காடுகளில் நெகிழி பொருள்களை சுத்தம் செய்து வரும் சோலைக்குருவி அமைப்புக்கும், கொடைக்கானல் ஏரியை சுத்தம் செய்த நகராட்சி நிா்வாகத்துக்கும், கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவை நவீனமயமாக்குவதற்கு ரூ. 2 கோடியில் பொருளுதவி செய்தவருக்கும் சான்றிதழ்கள், விருதுகளை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சென்னையைச் சோ்ந்த சுழல் சங்க முன்னாள் தலைவா்கள் மகேந்திரன், அனுராதா மகேந்திரன் ஆகியோா் வழங்கினா்.
பின்னா், நகராட்சி தூய்மைப் பணியாளா் கனகரத்தினம், மாற்றுத் திறனாளி பத்மநாதன், தச்சுத் தொழிலாளி சீலன், உணவக மேலாளா் வைத்திலிங்கம், ஆசிரியை ஷீலா, மனநல ஆலோசகா் சுஜித் ஆகியோருக்கு விருதுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் கொடைக்கானல் சுழல் சங்க முன்னாள் தலைவா்கள், செயலா்கள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா். முன்னாள் தலைவா் செல்வக்குமாா் நன்றி கூறினாா்.