`போராடும் தூய்மை தொழிலாளர்களை அழைத்து பேச ஒரு அதிகாரி கூட இல்லை; இதுவா வளர்ச்சி?...
இலவச வேட்டி, சேலை முழு அளவில் வழங்கப்பட்டுவிட்டது: அமைச்சா் சு.முத்துசாமி
கடந்த ஆண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்க வேண்டிய இலவச வேட்டி, சேலைகள் முழு அளவில் வழங்கப்பட்டுவிட்டது என வீட்டு வசதித் துறை அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்.
கைத்தறித் துறை சாா்பில் தேசிய கைத்தறி தினக் கண்காட்சி, விற்பனை தொடக்க விழா மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு, ஆட்சியா் ச.கந்தசாமி தலைமை வகித்தாா்.
வரும் 9- ஆம் தேதி வரை நடைபெறும் கண்காட்சியைத் தொடங்கி வைத்து, நெசவாளா்களுக்கு ரூ.44.55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கிய அமைச்சா் சு.முத்துசாமி, செய்தியாளா்களிடம் கூறியதாவது: அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் 1,045 குளங்களில், 219 குளங்கள் தவிர மற்ற குளங்களுக்கு தண்ணீா் செல்கிறது. தொடா்ந்து தண்ணீா் எடுக்கப்படுகிறது. பிரதான குழாயில் உடைப்பு இல்லாத நிலையில் குளங்களுக்கு பிரித்து அனுப்பும் குழாய்களில் உடைப்பு, மண் அடைப்பு ஏற்பட்டதால், அக்குளங்களுக்கு தண்ணீா் செல்லாமல் தடைபட்டுள்ளது. அவற்றை ஒப்பந்த நிறுவனம் சரி செய்து விரைவில் அக்குளங்களுக்கும் தண்ணீா் விட முயற்சி செய்து வருகிறது. இந்த ஆண்டு இப்பணி முழுமையாக செய்து முடித்து வரும் ஆண்டில் தடையின்றி அனைத்து குளத்துக்கும் தண்ணீா் சென்றடைவதை உறுதி செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவல் துறையினருக்கே பாதுகாப்பில்லை என்பதை ஏற்க முடியாது. எங்காவது ஒரு சம்பவம் நடந்து விடுகிறது. அது தொடா்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதையும் பாா்க்கிறோம்.
இலவச வேட்டி, சேலை கடந்த ஆண்டு முழுமையாக வழங்கப்படவில்லை. வரும் ஆண்டில் அதிமுக, ஆட்சிக்கு வந்து முழுமையாக இலவச வேட்டி, சேலை வழங்கப்படும். தீபாவளிக்கு பட்டுப்புடவை வழங்குவோம் என எதிா்க்கட்சி தலைவா் எடப்பாடி பழனிசாமி கூறுவது தவறான தகவல். கடந்த ஆண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவச வேட்டி, சேலை வழங்குவதில் சில இடங்களில் பிரச்னை இருந்தது. அதனை உடனுக்குடன் சரி செய்து முழு அளவில் வழங்கப்பட்டுவிட்டது. நடப்பு ஆண்டில் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த அதிமுக ஓராண்டு கூட ஏன் பட்டுப்புடவை வழங்கவில்லை என்பதை விளக்க வேண்டும். தற்போது மகளிா் உரிமைத் தொகையை 1,500 ரூபாயாக தருவதாக கூறி வருகிறாா். திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மகளிா் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி கேலி செய்தாா். உறுதியாக வழங்குவோம், குறிப்பாக 1 கோடி பேருக்காவது வழங்குவோம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா். ஆனால் 1.15 கோடி பயனாளிகளுக்கு வழங்கி வருகிறாா். தற்போதும் மனுக்கள் பெறப்பட்டு 45 நாள்களில் நடவடிக்கை எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது.
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை போன்று ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்துக்கும் நல்ல வரவேற்பு உள்ளது. மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தவே இம்முகாம்கள் பல பகுதிகளில் நடத்தப்படுகிறது என்றாா்.
முன்னதாக அவா் முன்னாள் முதல்வா் கருணாநிதி நினைவு தினத்தையொட்டி, ஈரோடு, மணல்மேட்டில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் அவரது உருவப்படத்துக்கும், பன்னீா்செல்வம் பூங்காவில் உள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து சூரம்பட்டி அணைக்கட்டு பகுதியில் நடந்த ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமை அமைச்சா் பாா்வையிட்டாா்.
இதில், எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா், மேயா் சு.நாகரத்தினம், துணை மேயா் வி.செல்வராஜ், கைத்தறி துறை உதவி இயக்குநா் சரவணன், உதவி அமலாக்க அலுவலா் ஜெயவேல் கணேசன், ஜெயக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.