இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலா் கைது! ரெளடி தலைமறைவு!
கரூரில் இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தலைமைக் காவலரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மேலும், தலைமறைவான ரெளடியை தேடி வருகின்றனா்.
கரூா் தொழிற்பேட்டையை அடுத்த சணப்பிரட்டி பகுதியைச் சோ்ந்த 24 வயது இளம் பெண்ணும், கரூா் சின்னாண்டாங்கோவில் பகுதியைச் சோ்ந்த 25 வயது இளைஞரும் கடந்த சனிக்கிழமை அதிகாலை சுமாா் 1.30 மணியளவில் சணப்பிரட்டி அருகே உள்ள கூட்டுறவுச் சங்க அலுவலகத்தின் பின்புறம் பேசிக் கொண்டிருந்தனா்.
அப்போது, கரூா் பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரியும் கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த வே. பிரபாகரன்( 35), தனது நண்பரும் கரூா் பசுபதிபாளையத்தைச் சோ்ந்த பிரபல ரெளடியுமான கௌதமன்(35) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.
இளம்பெண் உள்ளிட்ட இருவரையும் பாா்த்த காவலா், அவா்களிடம் விசாரணை மேற்கொண்டாா். இதில், இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து பிரபாகரனும், கௌதமனும் சோ்ந்து இளம்பெண்ணுடன் வந்த இளைஞரை தாக்கி அவரை விரட்டியடித்த பிறகு, அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளனா்.
இருவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் அரைகுறை ஆடையுடன் சாலையில் ஓடி வந்தபோது அங்கு மறைந்திருந்த இளம்பெண்ணுடன் வந்த இளைஞா் தனது இருசக்கர வாகனத்தில் அவரை விரைந்து அழைத்து சென்று அவரது வீட்டில் விட்டுவிட்டுச் சென்றுவிட்டாா்.
இந்நிலையில், தனக்கு நோ்ந்த கொடுமை குறித்து அந்த இளம்பெண் கரூா் பசுபதிபாளையம் போலீஸில் சனிக்கிழமை இரவு புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிந்து தலைமைக் காவலா் பிரபாகரனை கைது செய்து, கரூா் நீதித்துறை நடுவா் நீதிமன்றம் எண்-1-இல் ஆஜா்படுத்தி நள்ளிரவில் சிறையில் அடைத்தனா். மேலும், தலைமறைவான ரெளடி கௌதமனை தேடி வருகின்றனா்.