முருக பக்தா்கள் மாநாட்டில் அரசியல் பேசவில்லை: நயினாா் நாகேந்திரன்
ஈரானில் இருந்து வெளியேறும் ஆப்கன் மக்கள்! ஒரே நாளில் 30,000 பேர் தாயகம் திரும்பினர்!
ஈரான் நாட்டிலிருந்து ஒரே நாளில் 30,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் தங்களது தாயகத்துக்கு திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மற்றும் நிம்ரோஸ் ஆகிய மாகாணங்களில், அந்நாடு ஈரானுடன் இரண்டு முக்கிய எல்லைகளைப் பகிர்ந்து வருகின்றது.
இதில், மேற்கு ஹெராத்திலுள்ள இஸ்லாம் காலா எல்லை வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஆப்கன் மக்கள் திரும்பி வருவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்லாம் காலா எல்லை வழியாக 30,000-க்கும் மேற்பட்ட ஆப்கன் மக்கள் இன்று (ஜூன் 26) மேற்கு ஹெராத் மாகாணத்தினுள் நுழைந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், நாடு திரும்பும் மக்களுக்குத் தேவையான உணவு, மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தலிபான் அரசு வழங்கி வருவதாக, அந்நாட்டின் தகவல் மற்றும் கலாசாரத் துறை தெரிவித்துள்ளது.
இத்துடன், பாகிஸ்தான் மற்றும் ஈரான் நாட்டிலிருந்து கடந்த ஜூன் 25 ஆம் தேதியன்று, ஒரே நாளில் சுமார் 1,685 குடும்பங்களைச் சேர்ந்த 7,474 ஆப்கன் மக்கள் தாயகம் வந்தடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
பல ஆண்டுகளாக உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து வெளியேறி, ஏராளமான மக்கள் பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.
பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளில் மட்டும் சுமார் 70 லட்சம் ஆப்கன் மக்கள் ஆவணங்களின்றி அகதிகளாக வாழ்ந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், கடந்த 2021-ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்து வரும் தலிபான்கள் தங்களது குடிமக்களைத் தாயகம் திரும்பி வருமாறு, வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
Afghans leaving Iran. 30,000 return home in a single day
இதையும் படிக்க:நெதன்யாகு மீதான வழக்கு விசாரணையை உடனே ரத்து செய்க..! - டிரம்ப் வேண்டுகோள்