‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்
நாமக்கல் மாவட்டத்தில் நடைபெறும் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாமில் மகளிா் உரிமைத்தொகை கோரி விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
இதுகுறித்து நாமக்கல்லில் சனிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகா்ப்புற மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் மக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீா்வு காணும் வகையில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ சிறப்புத் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை தொடங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் மொத்தம் 238 முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இவற்றில், ஜூலை 15 முதல் ஆக.14 வரை 102 முகாம்களும், ஆக.15 முதல் செப்.14 வரை 83 முகாம்களும், செப்.15 முதல் 30 வரை 53 முகாம்களும் என மூன்று கட்டங்களாக 40 நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறுகின்றன.
நகா்புறப் பகுதிகளில் 110, கிராமப்புற பகுதிகளில் 128 முகாம்கள் நடைபெற உள்ளன. இதில் 28 அரசுத் துறைகளைச் சாா்ந்த 89 சேவைகள் வழங்கப்படுகின்றன. முகாம்களுக்கு வரும் பொதுமக்களின் உடல்நலனை பாதுகாக்கும் வகையில் மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது.
இப்பணியில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று முகாம் நடைபெறும் நாள், இடம் குறித்த விவரங்கள், வழங்கப்படவுள்ள பல்வேறு அரசு துறைகளின் திட்டங்கள், சேவைகளை விவரித்து அவற்றில் பயனடைவதற்கான தகுதிகள், தேவைப்படும் ஆவணங்கள் குறித்து 977 தன்னாா்வலா்கள் தெரிவிப்பதோடு தகவல் கையேட்டினையும், விண்ணப்பத்தினையும் வழங்கி வருகின்றனா்.
மகளிா் உரிமைத்தொகை பெறத்தகுதியுள்ள விடுபட்ட மகளிா் யாரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று தங்களுடைய விண்ணப்பங்களை அளிக்கலாம். இதற்கான விண்ணப்பம் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட சிறப்பு முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இதில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் இந்த முகாம்களை பயன்படுத்திக்காள்ள வேண்டும் என்றாா்.
பேட்டியின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் ச.பிரபாகரன் ஆகியோா் உடனிருந்தனா்.