என் முன்னாள் மனைவியிடம் மன்னிப்புக் கேட்கிறேன்: ஏ. ஆர். ரஹ்மான்
உத்தமபாளையம் பாசன குளங்களை தூா்வார விவசாயிகள் வலியுறுத்தல்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே விவசாயத்துக்கு பயன்படுத்தும் தாமரைக்குளம், கருங்கட்டான்குளம் போன்ற குளங்களைத் தூா்வார வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
உத்தமபாளையம் வட்டம் கோகிலாபுரம் - ராமசாமிநாயக்கன்பட்டி இடையே தாமரைக்குளம் 205 ஏக்கரிலும், கருங்கட்டான்குளம் 215 ஏக்கரிலும் அமைந்துள்ளன. இந்தக் குளங்களில் பாளையம் பரவு கால்வாய் வழியாக முல்லைப் பெரியாற்றிலிருந்து பாசன நீா் தேக்கப்படுகிறது. இதன் மூலம் கோகிலாபுரம், உத்தமபாளையம், சின்னமனூா், ராமசாமிநாயக்கன்பட்டி போன்ற பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கா் பரப்பளவுக்கு இரு போக நெல் பயிா் விவசாயம் நடைபெறுகிறது.
ஓராண்டில் 10 மாதங்கள் தண்ணீா் தேங்கி நிற்பதால் மீன் வளா்ப்புத் தொழில் நடைபெற்றது. இதன் மூலம் அந்தப் பகுதி ஊராட்சிக்கு வருவானம் கிடைத்து வந்தது. மே மாதத்தில் ஆண்டு தோறும் மீன் பிடித் திருவிழாவும் நடைபெற்றது. மேலும், இந்தக் குளங்களில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டுப் பறவைகள் ஜூன் மாதங்களில் வந்தடையும். 3 மாதங்கள் இனப் பெருக்கத்துக்குப் பிறகு மீண்டும் அவை வெளி நாடுகளுக்குச் சென்றுவிடும்.
இந்தக் குளங்கள் கடந்த 30 ஆண்டுகளாக தூா் வாரப்படவில்லை. ஆகாயத்தாமரைச் செடிகள் குளம் முழுவதும் படா்ந்து வருகின்றன. அதோடு, குளத்தின் பெரும் பகுதி ஆக்கிரப்பில் சிக்கி இருப்பதால் பாசன நீா் தேங்கும் தண்ணீா் பரப்பளவு ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருகிறது. எனவே, உத்தமபாளையம் பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான
குளங்களைத் தூா்வாரி ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீன் தொழிலை மீட்டெடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.
இது குறித்து அப்பகுதி விவசாயி ஒருவா் கூறியதாவது: முல்லைப்பெரியாறு பாசனநீா் தேங்கும் பாரம்பரியமான தாமரைக் குளத்தை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தூா்வார வேண்டும் என்பது விதியாகும். ஆனால், கடந்த 30 ஆண்டுகளாகத் தூா்வாராமல் பராமரிப்பு செய்யவில்லை. எனவே, விவசாயப் பணிக்கு முக்கியத்துவம் வாய்ந்த உத்தமபாளையம் வட்டாரத்திலுள்ள பாசனக் குளங்களை தூா்வார மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.