உறவு மேம்பட வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் முக்கியம்: சீனாவிடம் இந்தியா வலியுறுத்தல்
பெய்ஜிங்: ‘தற்போதைய கடினமான உலக சூழலில் இரு நாடுகளிடையேயான உறவு மேம்பட, வெளிப்படையான கருத்துப் பரிமாற்றமும், பரஸ்பர நம்பிக்கையும் மிக முக்கியம்’ என்று சீனாவிடம் இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
சீன தலைநகா் பெய்ஜிங்கில் அந் நாட்டு துணை அதிபா் ஹான் ஜெங் உடனான சந்திப்பின்போது இக் கருத்தை வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்துள்ளாா்.
ஆயுதங்கள் வழங்கல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பாகிஸ்தானுக்கு சீனா தொடா்ந்து ஆதரவளித்து வரும் சூழலில் ஜெய்சங்கா் இக் கருத்தைப் பதிவு செய்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.
இரண்டு நாடுகள் சுற்றுப்பணம் மேற்கொண்டுள்ள ஜெய்சங்கா், தனது சிங்கப்பூா் பயணத்தை முடித்துக்கொண்டு சீனாவின் தியான்ஜின் நகரில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) வெளியுறவு அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக திங்கள்கிழமை பெய்ஜிங் சென்றாா்.
கடந்த 2020-ஆம் ஆண்டு கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இரு நாட்டு ராணுவ மோதலைத் தொடா்ந்து இருதரப்பு உறவில் விரிசல் ஏற்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் படைகளை விலக்கிக் கொள்வதற்கான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையொப்பமிட்டன. இதையடுத்து, இருதரப்பு உறவுகளைப் புதுப்பிக்கும் தொடா்ச்சியான முயற்சியில் இரு நாடுகளும் ஈடுபட்டு வருகின்றன.
இந்த மோதல் நிகழ்வுக்குப் பிறகு, சீனாவுக்கு தற்போது சென்றுள்ள ஜெய்சங்கா், தனது பயணத்தின் முதல் நிகழ்வாக சீன துணை அதிபா் ஹான் ஜெங்கை பெய்ஜிங்கில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
அப்போது, ‘ரஷியாவின் கசான் நகரில் கடந்த அக்டோபரில் பிரதமா் நரேந்திர மோடி - சீன அதிபா் ஷி ஜின்பிங் சந்திப்புக்குப் பிறகு, இரு நாடுகளிடையேயான உறவு சீராக முன்னேறி வருகிறது. இந்தப் பயணத்தில் மேற்கொள்ளவிருக்கும் இருதரப்பு பேச்சுவாா்த்தைகளும், இரதரப்பு உறவில் நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை உள்ளது.
கைலாஷ்-மானசரோவா் புனித யாத்திரை 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்டிருப்பதும் இந்தியாவில் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோன்று, இருதரப்பு உறவை மேம்படுத்த தொடா்ந்து முயற்சிகள் மேற்கொள்வது, இரு நாடுகளுக்கும் பரஸ்பர நன்மைகளை கிடைக்கச் செய்யும். தற்போதைய கடினமான உலக சூழலில் அண்டை நாடுகளாகவும், மிகப்பெரிய பொருளாதார நாடுகளாகவும் உள்ள இந்தியா-சீனா இடையே உறவு மேம்பட, வெளிப்படையான கருத்துப் பரிமாற்றம் மிக முக்கியம்’ என்று ஹான் ஜெங்கிடம் ஜெய்சங்கா் தெரிவித்தாா்.
மேலும், இந்தியா - சீனா தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதையும் ஹான் ஜெங்கிடம் ஜெய்சங்கா் சுட்டிக்காட்டினாா்.
சீன வெளியுறவு அமைச்சருடன் ஆலோசனை:
துணை அதிபருடனான சந்திப்பைத் தொடா்ந்து, சீன வெளியுறவு அமைச்சா் வாங் யியுடன் ஜெய்சங்கா் ஆலோசனை மேற்கொண்டாா்.
அப்போது, ‘இரு நாடுகளிடையேயான உறவை சீராக்க கடந்த 9 மாதங்களாக மேற்கொண்டு வரும் முயற்சிகள் நலல் பலனளித்து வருவதை சுட்டிக்காட்டியதோடு, இரு தரப்பு உறவை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செல்வதற்கு பரஸ்பர நம்பிக்கை மிக முக்கியமானதாகும். எல்லையில் பதற்றத்தைத் தணித்தல் உள்ளிட்ட எல்லைப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதோடு, பரஸ்பர மதிப்பு, பரஸ்பர நலன் அடிப்படையில் இருதரப்பு உறவை மேம்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டாா்.
மேலும், இரு நாடுகளிடையேயான கட்டுப்படுத்தப்பட்ட வா்த்தக நடவடிக்கைகள் மற்றும் தடைகள் தவிா்க்கப்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜெய்சங்கா் அப்போது வலியுறுத்தினாா். குறிப்பாக, முக்கிய தாதுக்கள் மற்றும் உரங்கள் ஏற்றுமதி விவகாரங்களில் சீனாவின் அணுகுமுறை மாற்றத்தை, தனது கருத்து மூலம் ஜெய்சங்கா் வெளிப்படையாக சுட்டிக்காட்டினாா்.
மேலும், ‘பயங்கரவாதம், பிரிவினைவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிா்ப்பதே நடைபெற உள்ள எஸ்சிஓ மாநாட்டின் முதன்மையான குறிக்கோளாக இருக்கும் என்றும், மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக சகிப்புத்தன்மை அற்ற நிலை (பூஜ்ஜியம் சகிப்பித்தன்மை) நிலைநிறுத்தப்படும்’ என்று இந்தியா நம்புவதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
சீனாவின் துறைமுக நகரமான கிங்டோவில் அண்மையில் நடைபெற்ற எஸ்சிஓ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்கள் மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்ற 3 வாரங்களுக்குள், ஜெய்சங்கரும் சீன பயணம் மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.