காதலியை மறக்க மலையேறிய இளைஞன்; 6 நாட்களுக்குப்பின் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி?
முன்னாள் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் வீட்டை விட்டு எந்த ஒரு அத்தியாவசிய பொருட்களும் இல்லாமல் மலைப் பகுதிக்குச் சென்ற, இளைஞரை மீட்ட சம்பவம் சீனாவில் நடந்திருக்கிறது.
28 வயதான லியூ என்ற இளைஞர் தன் காதலி உடனான பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாமல் மலைப்பகுதிக்கு சென்றிருக்கிறார்.
அதுவும் தனது மொபைல் போன், உணவு அல்லது பாதுகாப்புக்கு தேவையான எந்த ஒரு உபகரணமும் இல்லாமல் அவர் மலையின் குகை பகுதிக்குச் சென்றிருக்கிறார்.

ஆறு நாட்கள் அப்படியே அலைந்து திரிந்து இருக்கிறார். லியூவின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரைத் தேடி வந்தனர்.
ஆனாலும் அவர் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. கடைசியாக அவர் ஒரு பூங்காவின் கண்காணிப்பு கேமராவில் காணப்பட்டிருக்கிறார். அதன் பின்னர் அவர் மலைப்பகுதிக்குச் சென்றிருக்கலாம் என்று அதிகாரிகள் அங்கு தேடி இருக்கின்றனர்.
கடைசியாக அவர் மலைப்பகுதியில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆறு நாட்களும் மலைப்பகுதியில் இருந்த காட்டுப் பழங்களை பறித்து சாப்பிட்டு நீரோடையில் இருக்கும் தண்ணீரைக் குடித்தும் உயிர் பிழைத்திருக்கிறார்.
மலைப்பகுதியில் தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்ட நிலையில் அவருக்கு உடனடியாக மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த இளைஞரிடம் போலீசார் விசாரிக்கையில் "அவருக்குக் காதல் தோல்வி ஏற்பட்டிருக்கிறது, ஒரு மன அமைதிக்காக இதுபோன்ற மலைகளில் சுற்றி திரிந்ததாகக் கூறியிருக்கிறார்"