வேலையில்லா பட்டதாரி டு குடும்பஸ்தன்! - என் த்ரில் பயணம் | #ஆஹாகல்யாணம்
நிறப்பாகுபாட்டை உடைத்து உலக அழகிப் பட்டம் - ஆப்ரிக்கா வரை சென்ற புதுச்சேரி பெண்ணின் தற்கொலை பின்னணி
மாடலிங் மீதான காதலால் மருத்துவப் படிப்பை துறந்த சங்கரப்பிரியா
புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் 25 வயதான சங்கரப்பிரியா. சிறு வயது முதல் படிப்பில் சுட்டியாக இருந்த சங்கரப் பிரியா, பல சூழல்களில் நிற வெறுப்பையும் எதிர்கொண்டிருக்கிறார்.
ஆனால் அவற்றை கண்டுகொள்ளாத சங்கரப் பிரியா, மருத்துவராகும் கனவுடன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தினார். அவர் நினைத்தது போலவே அவரது உழைப்பும், படிப்பும் ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் சீட்டை பெற்றுக் கொடுத்தது.
அங்கு சங்கரப் பிரியாவின் அறிவார்ந்த பேச்சு, அடர் நிறம், வசீகரிக்கும் கண்களைப் பார்த்த அவரது நண்பர்கள், `நீ மாடலிங் துறைக்கு செல்ல வேண்டியவள்’ என்று கூற, மாடலிங் துறை மீது சங்கரப் ப்ரியாவுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது.

கல்லூரியின் முதல் ஆண்டு முடிவில் ஜிப்மர் மருத்துவமனையில் ஆண்டுதோறும் நடைபெறும் `ஸ்பந்தன்’ கலைவிழாவில், ஃபேஷன் ஷோவில் கலந்து கொண்டார். அதில் கிடைத்த கைத்தட்டல்களும், ஆரவார வரவேற்புகளும் சங்கரப் பிரியாவின் பார்வையை மாடலிங் துறையில் ஆழமாக பதிய வைத்தது.
சங்கரப் பிரியா சான் ரேச்சலாக மாறிய தருணம் அதுதான்.
அதையடுத்து கல்லூரிகளுக்கிடையேயான அழகிப் போட்டிகள், மாநிலங்களில் நடைபெற்ற அழகிப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றிகளை குவிக்க ஆரம்பித்தார்.
மாடலிங் துறையின் மீதான ஈர்ப்பால் தன்னுடைய மருத்துவர் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வெளியே வந்தார். இந்த நிலையில்தான் கடந்த 2023-ம் ஆண்டு ஆப்ரிக்காவில் நடைபெற்ற `மிஸ் ஆஃப்ரிக்கா’ அழகிப் போட்டியில் கலந்துகொள்ள அவருக்கு அழைப்பு வந்தது.
மிஸ் ஆஃப்பிரிக்கா 2023
ஆனால் அதற்கு செல்ல பணமில்லாததால் முதல்வர் ரங்கசாமியின் உதவியை நாடினார் சான் ரேச்சல். அதையடுத்து ஆப்ரிக்கா சென்ற ரேச்சல், அங்கு நடைபெற்ற கறுப்பழகிப் பிரிவில் `மிஸ் ஆப்பிரிக்கா 2023’ இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
`கார் தொடங்கி செருப்பு, வாட்ச், கண்ணாடி என அனைத்திலும் கறுப்பு நிறத்தை விரும்பும் சமூகம், மனிதர்களில் மட்டும் கறுப்பு நிறத்தை ஒதுக்குகிறது. நிறம் எப்படி மனிதர்களின் அகத்தை முடிவு செய்யும் ? மனிதர்களின் அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும். அது என்னால் முடியும்’ என்று சான் ரேச்சலிடம் இருந்து வெளியான அழுத்தமான வார்த்தைகளை, ஆழமாக கவனித்தது மாடலிங் உலகம்.
தனக்கும், தன்னுடைய மாடலிங் துறை வெற்றிக்கும் பக்கபலமாக நின்ற தன்னுடைய காதலன் சத்யாவை கடந்த 2024-ம் ஆண்டு திருமணம் செய்தார்.
மிஸ் புதுச்சேரி 2020, மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழகம் 2019, குயின் ஆப் மெட்ராஸ் 2022, மிஸ் ஆப்பிரிக்கா கோல்டன் இந்தியா 2023 என பல பட்டங்களையும் கருப்பழகி பிரிவில் உலக அழகி பட்டத்தையும் வென்றவர்.

இந்த நிலையில்தான் கடந்த ஜூன் மாதம் 5-ம் தேதி தனது தந்தை காந்திக்கு போன் செய்தவர், நூற்றுக்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகள் மற்றும் ரத்த அழுத்த மாத்திரைகளை சாப்பிட்டுவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.
அதில் அதிர்ச்சியடைந்த காந்தி உடனே சான் ரேச்சல் வீட்டுக்கு சென்று, அங்கு மயங்கிக் கிடந்த மகளை அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் இரண்டு நாட்கள் அங்கு சிகிச்சையில் இருந்த சான் ரேச்சல், அதன்பிறகு மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமலேயே வீட்டிற்கு சென்றுவிட்டார்.
அதற்கடுத்தடுத்த நாட்களில் அவரது உடல் நிலைமை மோசமானதால், மூலக்குளம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல்லீரல் பாதிக்கப்பட்டு சுமார் 25 நாட்கள் அங்கு சிகிச்சை பெற்றவர், பொருளாதார பற்றாக்குறையால் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிக்ச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
திருமண செலவுக்காகவும், ஃபேஷன் ஷோ பயிற்சி வகுப்புகளுக்காகவும் வீட்டிற்கு தெரியாமல் நிறைய கடன் வாங்கிய ரேச்சல், அதை அடைப்பதற்காக தன்னுடைய நண்பர்களிடம் ரூ.30 லட்சம் வரை கடன் கேட்டிருக்கிறார். அவ்வளவு பெரிய தொகையை அவரால் திரட்ட முடியாததால் ஏற்பட்ட விரக்தியில், தன்னுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று கடிதம் எழுதி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
