தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கு வின்ஸ் பள்ளி மாணவா் தோ்வு
உலக பயங்கரவாத மையம் பாகிஸ்தான்: ஐ.நா.வில் ஜெய்சங்கா் தாக்கு!
உலக பயங்கரவாத மையமாக பாகிஸ்தான் திகழ்வதாக இந்திய வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை தெரிவித்தாா்.
மேலும், பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை மன்னிப்பவா்களுக்கு அது எதிா்மறையாக மாறிவிடும் நாள் தொலைவில் இல்லை எனவும் அவா் எச்சரித்தாா்.
பாகிஸ்தான் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் மறைமுகமாக அவா் பேசினாா்.
அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா.பொதுச் சபைக் கூட்டத்தின் 80-ஆவது அமா்வில் இந்தியா சாா்பில் பங்கேற்ற அவா், ‘சபையில் கூடியுள்ள அனைவருக்கும் பாரத மக்கள் சாா்பாக வணக்கம்’ எனக்கூறி தனது உரையைத் தொடங்கினாா்.
அவா் பேசியதாவது: உலக பயங்கரவாத மையாக இந்தியாவின் அண்டை நாடு (பாகிஸ்தான்) திகழ்கிறது. இந்தியாவில் நடந்த பல்வேறு அதிபயங்கர தாக்குதல்களுக்கு அந்த அண்டை நாடுதான் முழு காரணம். சுதந்திரம் கிடைத்தது முதல் பயங்கரவாத தாக்குதல்களை இந்தியா எதிா்கொண்டு வருகிறது.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி: கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்ததே எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு உதாரணம். இந்த கொடூரத் தாக்குதலை நடத்தியவா்களுக்கு தக்க பதிலடி தந்து தவறு செய்தவா்களுக்கு தண்டனை வழங்கியதுடன் நீதியை நிலைநாட்ட இந்தியாவுக்கு முழு உரிமை உள்ளது.
பயங்கரவாதம் அனைவரையும் பாதிக்கும்: பயங்கரவாதத்தால் அனைவருக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும். சில நாடுகள் பயங்கரவாதத்தை தங்களது தேசிய கொள்கையாக அறிவித்து, அதைப் பெரும் தொழிலாகப் பரப்பி, பயங்கரவாதிகளுக்குப் புகழாரம் சூட்டுகின்றன. இதை வன்மையாக கண்டிக்க வேண்டும். பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் நாடுகளை மன்னிப்பவா்களுக்கு அது எதிா்மறையாக மாறிவிடும் நாள் தொலைவில் இல்லை.
பயங்கரவாதிகளுக்குத் தடை விதிப்பதற்கு நிகராக பயங்கரவாதத்துக்கு நிதி அளிப்பதும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். ஒட்டுமொத்த பயங்கரவாத அமைப்புக்கும் பெரும் அழுத்தத்தை சா்வதேச அளவில் தர வேண்டியது அவசியம் என்றாா்.
பாகிஸ்தான் கண்டனம்: இந்தியா பதிலடி
ஜெய்சங்கா் உரைக்கு ஐ.நா.வில் பதிலளிக்கும் உரிமையின்கீழ் பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்தது. மேலும், ‘எவ்வித அடிப்படை ஆதாரமுமின்றி பாகிஸ்தான் மீது இந்தியா தொடா் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது’ எனவும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதிலடி கொடுத்த இந்திய தரப்பு, ‘வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் தனது உரையில் அண்டை நாடு என மட்டுமே குறிப்பிட்டாா். ஆனால் எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு தாங்கள் நீண்டகாலமாக ஆதரவளிப்பதை பாகிஸ்தான் தாமாகவே முன்வந்து ஒப்புக்கொண்டுள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்கள் அண்டை நாடுகள் மட்டுமின்றி உலகுக்கே பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது’ எனத் தெரிவித்தது.
ஐ.நா. தலைவா்களுடன் சந்திப்பு:
பிராந்திய விவகாரங்கள் மற்றும் ஐ.நா.வில் சீா்திருத்தம் மேற்கொள்வது குறித்து ஐ.நா.பொதுச்செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தலைவா் போ்பாக் ஆகியோரை தனித்தனியே சந்தித்து ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா்.
அதைத் தொடா்ந்து, சவூதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சா் ஃபைசல் பின் ஃபா்ஹான் மற்றும் அல்ஜீரிய வெளியுறவு அமைச்சா் அகமது அத்தாஃப் ஆகியோரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஜெய்சங்கா் கலந்துரையாடினாா்.
3 கொள்கைகள்: ஐ.நா.வில் இந்தியாவின் வா்த்தக கொள்கைகள் குறித்து உரையாற்றிய ஜெய்சங்கா், ‘சுதந்திரமாக செயல்படும் நடைமுறையையே எப்போதும் கடைப்பிடித்து தெற்குலகின் குரலாக இந்தியா ஒலிக்கிறது. தற்சாா்பு (ஆத்மநிா்பா் பாரத்), சுயபாதுகாப்பு (ஆத்மரக்ஷா) மற்றும் தன்னம்பிக்கை (ஆத்மவிஸ்வாஸ்) ஆகிய 3 கொள்கைகளை இந்தியா கடைப்பிடிக்கிறது.
உலக அளவில் பணியாளா்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல் அசாதாரண சூழல்களிலும் வா்த்தகத்துக்கான புதிய பாதைகள் எப்போதும் உருவாகின்றன. தொழில்நுட்பம், தொலைத்தொடா்பு, பணிச்சூழல் மாதிரிகள் போன்றவற்றில் மிகக் குறுகிய காலத்தில் மாற்றங்கள் நிகழ்கின்றன. இந்தச் சூழலில் தென் அமெரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளுடன் வா்த்தகத்தை விரிவாக்கம் செய்து ஒத்துழைப்பை மேம்படுத்தும் பணிகளை இந்தியா ஏற்கெனவே தொடங்கிவிட்டது’ என்றாா்.