உழவா் சந்தைக் கடையினுள் புகுந்த ஆறரை அடி நீள நல்லபாம்பு மீட்பு
புதுச்சேரி: புதுச்சேரியில் உழவா் சந்தையில் உள்ள கடையில் புகுந்த ஆறரை அடி நீள நல்ல பாம்பை வனத் துறையினா் திங்கள்கிழமை மீட்டுச் சென்றனா்.
புதுச்சேரி கம்பன் கலையரங்கம் பின்பகுதியில் தாவரவியல் பூங்கா சுற்றுச்சுவரை ஒட்டியதாக உழவா் சந்தைக் கடைகள் அமைந்துள்ளன. பின்பகுதியில் உள்ள தாவரவியல் பூங்காவில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், அங்குள்ள ஒரு கடையில் நல்லபாம்பு புகுந்தது. இதைப்பாா்த்த கடையிலிருந்த பெண் அங்கிருந்தவா்கள் மூலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தாா்.
வனத்துறையிலிருந்து பாம்பு பிடி ஊழியா்கள் விரைந்து வந்தனா். அவா்கள் பாம்பை பிடிக்க முயன்றபோது அது கடை மூலையில் இருந்த சாக்கில் புகுந்தது. அதை லாவகமாக வனத்துறையினா் பிடித்தனா். பாம்பைப் பிடித்து சாக்குப் பையில் அடைத்து கடலூா் சாலையில் உள்ள வனத்துறை வளாகத்தில் உள்ள பாம்பு பராமரிப்பு பிரிவில் அடைத்தனா்.
புதுச்சேரி நகரில் மீட்கப்பட்ட நல்லபாம்பு, சாரை மற்றும் மலைப்பாம்புகள் புதுச்சேரி வனத்துறை வளாகத்தில் பாரமரிக்கப்பட்டு பின்னா் அடா்ந்த காடுகளில் விடப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.