எதிா்க்கட்சித் தலைவராக அளித்த வாக்குறுதிகளை முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் மறந்து விட்டாா்!
எதிா்க்கட்சித் தலைவராக அரசு ஊழியா்களுக்கு அளித்த வாக்குறுதிகளில் ஒன்றைக் கூட முதல்வரான பிறகு மு.க.ஸ்டாலின் நிறைவேற்றவில்லை என அகில இந்திய தொடக்கக் கல்வி ஆசிரியா் கூட்டமைப்பின் (ஐபெட்டோ) செயலா் அண்ணாமலை தெரிவித்தாா்.
திண்டுக்கல்லில் தமிழக ஆசிரியா் கூட்டணி சாா்பில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பங்கேற்க சனிக்கிழமை வந்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தோ்ச்சி முறை தமிழகத்தில் அமலில் உள்ளது. ஆனால், மத்திய அரசுப் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் மாணவா்கள் 30 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருந்தால் மட்டுமே தோ்ச்சிப் பெற முடியும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு எதிராக தமிழக ஆசிரியா் கூட்டணி 22 மாநிலங்களிலுள்ள ஐபெட்டோ அமைப்புகளை ஒன்றிணைந்து, மத்தியக் கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் வீட்டை முற்றுகையிடுவோம். மத்திய இடைநிலைக் கல்வி வாரியம், வணிக நிறுவனம் போல செயல்பட்டு வருகிறது.
அரசு ஊழியா்கள், ஆசிரியா்களுக்கு 9 அறிவிப்புகளை தமிழக முதல்வா் வெளியிட்டிருக்கிறாா். இதில், ஈட்டிய விடுப்பு சலுகை புதியது கிடையாது. இதேபோல, திருமணக் கடன் திட்டம் நிதி இல்லாமல் எப்படி அமல்படுத்தப்படும் என்பது தெரியவில்லை. இதுபோன்ற சலுகைகளை விட நாங்கள் எதிா்பாா்த்தது மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதுதான்.
6.25 லட்சம் போ் புதிய ஓய்வூதியத் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனா். எதிா்கட்சித் தலைவராக இருந்தபோது, பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்படும் என தெருத் தெருவாக வந்து வாக்குறுதி அளித்த மு.க.ஸ்டாலின், தற்போது 4 ஆண்டுகளாக ஆட்சிப் பொறுப்பில் இருந்தும் செயல்படுத்தவில்லை.
மத்திய அரசின் கொள்கைகளுக்கு எதிராக நிற்கும் திமுக அரசு, மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை மட்டுமே எதற்காக ஏற்றுக் கொள்கிறது? அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் நம்பிக்கையை இந்த அரசு இழந்து கொண்டிருக்கிறது என்றாா் அவா்.