என் துணிப் பெட்டில கொஞ்ச பணத்தோட நீங்க வெச்ச துணிப்பை இன்னனும் இருக்குப்பா! - மகனின் கடிதம்
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
அன்பிற்கினிய பெற்றோர்களுக்கு, மகன் எழுதிக் கொள்வது...
நான் இங்கு நலம். நீங்களும் தங்கையும் நலமா..? தாத்தா பாட்டி மற்றும் உற்றார் உறவினர் அனைவரும் நலமா..? நலம் நலமறிய ஆவல். சென்ற மாதம் அனுப்பி வைத்த பணம் போதுமானதாக இருந்ததா..?
தங்கையின் படிப்பிற்கும் தாத்தா பாட்டியின் மருத்துவச் செலவுகளுக்கும் ஏதேனும் பணத்தேவை ஏற்பட்டால் முன்கூட்டியே சொல்லி விடுங்கள். இந்த மாதத்திலிருந்து சம்பளத்தில் 100 ரூபாய் உயர்த்திக் கொடுப்பதாக முதலாளி சொல்லியிருக்கிறார்.
இந்த மாதம் ஒரு வெளிநாட்டு பயணியிடம் திறமையாக உரையாடி அதிக அளவில் வியாபாரம் செய்ததை ஊக்குவித்து சம்பள உயர்வை அறிவித்தார். மேலும் என்னிடம் பொருள் வாங்கிய அந்த சுற்றுலாப் பயணி நான் அவர்களுடன் வியாபாரம் செய்ததை பாராட்டி அவர் நாட்டின் நாணயத்தை பரிசாக கொடுத்தார்.
இந்த பாராட்டுக்களுக்கு ஏழ்மையிலும் என்னை நன்றாக வளர்த்து நன்கு படிக்க வைத்த உங்களுக்கு என் முதல் வணக்கங்கள். மேலும் அவர் அந்த பணத்தை வீணாக பயன்படுத்தாமல் பணத்தேவை ஏற்படும் போது மட்டும் உபயோகப்படுத்தும் படி அறிவுறுத்தினார்.
அவர் சொன்னதை கேட்டவுடன், எனக்கு உங்கள் ஞாபகம் வந்தது. நாம் வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்து வந்தாலும் நம் அனைவரின் உணர்வுகள் ஒன்றாகவே உள்ளது.
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற நம் தாயகத்தின் தாக்கத்தை அவர்களிடம் காண முடிந்தது.

நான் முதல் முதலாக படிப்பிற்காக ஊரை விட்டுச் சென்ற போது என் துணிப் பெட்டியில் ஒரு மஞ்சள் துணியில் முடிந்த பணத்தை போட்டு அனுப்பி விட்டீர்கள். கையில் பணமில்லாத போது யாரிடமும் கையேந்தாமல் அந்த பணத்தை எடுத்துக் கொண்டு ஊருக்கு திரும்ப வேண்டும் என்று சொன்னீர்கள்.
நீங்கள் கொடுத்த பணம் இன்றும் அந்தப் பெட்டியில் தான் உள்ளது. தற்போது அதில் சில பணங்கள் காலப்போக்கில் மதிப்பிழந்து போயிற்று. நம் ஊருக்கு திரும்பி வர முடியுமா.? என்று எண்ணும் அளவுக்கு விலைவாசியும் ஏறிவிட்டது. எனவே நான் ஒரு முடிவு எடுத்திருக்கிறேன்.
மாதாமாதம் நான் வழக்கமாக கொடுக்கும் பணத்தை உங்களுக்கு அனுப்பிவிட்டு மீதமுள்ள பணத்தை அருகில் இருக்கும் நகைக் கடையில் மாதத் தவணை அடிப்படையில் தங்கமாக சேர்த்து வைக்கிறேன். இந்த மாதத்திலிருந்து ஆரம்பித்தால் அடுத்த வருடம் ஊருக்கு வரும் வேளையில், என்னுடைய சேமிப்பை உங்கள் கைகளில் தங்கமாக சேர்த்து விடுவேன். இது குறித்து உங்கள் ஆலோசனைகளை கேட்க விரும்புகிறேன். தங்கள் வழிகாட்டுதல்கள் வேண்டி காத்திருக்கிறேன்.
நன்றி, வணக்கம்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.