Into The Mountains with Director Ram | Promo | Paranthu Po | Interview | Vikatan...
மின் தடையால் விவசாயப் பணிகள் பாதிப்பு: குறைதீா் கூட்டத்தில் புதுகை விவசாயிகள் அதிருப்தி
விவசாயப் பணிகளைப் பாதிக்கும் வகையில் அடிக்கடி மின் தடை ஏற்படுத்தப்படுவதாக புதுகை விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டத்தில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் பேசியது:
இந்திய விவசாயிகள் சங்கப் பொதுச் செயலா் கோ.ச. தனபதி: மத்திய அரசு அறிவித்துள்ள மரபணு திருத்தப்பட்ட 2 புதிய நெல் ரகங்களுக்கும் தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும். மாவட்டத்தில் விவசாயப் பணிகளைப் பாதிக்கும் வகையில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதைத் தடுக்க வேண்டும்.
காவிரி- குண்டாறு இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவா் மிசா. மாரிமுத்து:
கிடப்பில் போடப்பட்டுள்ள காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிதி ஒதுக்கி, பணிகளை விரைவுபடுத்த வேண்டும். கவிநாடு கண்மாயில் முழுமையாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூா்வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
தென்னை விவசாயிகள் சங்கத் தலைவா் செல்லத்துரை: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 118 வேளாண் பொறியியல் துறை டிராக்டா்கள் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவற்றை மீண்டும் மாவட்டப் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். விவசாயிகளுக்கு பயிா்க் கடன் அதிகமாக வழங்க வேண்டும்.
விவசாயி தங்கராஜ்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மழையால் நெல் பாதிக்கப்படாமல் இருக்க ஷெட் அமைக்க வேண்டும். கூட்டுறவுச் சங்கங்களில் பழுதடைந்துள்ள வேளாண் கருவிகளை பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும். கூட்டுறவுச் சங்கத்தில் உரத் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்.
விவசாயி சுப. கணேசன்: பலாப்பழத்தில் இருந்து மதிப்புக் கூட்டுப் பொருள் தயாரிக்க தொழிற்சாலை அமைக்க வேண்டும். முதிா்ந்த வாழைத் தண்டுகளைத் தூளாக்கி, இயற்கை உரமாக்கும் தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்ய வேண்டும்.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியா் மு. அருணா பேசியது:
ஜூன் 24ஆம் தேதி வரை பெய்திருக்க வேண்டிய இயல்பான மழை 204 மிமீ. நிகழாண்டில் 184 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. 20.26 மிமீ குறைவாகும்.
மாவட்டம் முழுவதும் உள்ள 33 வேளாண் விரிவாக்க மையங்களில் 240 டன் நெல், 34 டன் பயறு, 52 டன் நிலக்கடலை, 3 டன் சிறுதானியங்கள், 159 கிலோ எள் விதைகளும் இருப்பு உள்ளன.
மாவட்டம் முழுவதும் உள்ள தனியாா் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களில் 3256 டன் யூரியா, 675 டன் டிஏபி, 1535 டன் பொட்டாஷ், 2880 டன் காம்ப்ளக்ஸ் உரங்களும் இருப்பு உள்ளன என்றாா் அருணா.
கூட்டத்தில், மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மு. சங்கரலட்சுமி, அறந்தாங்கி வருவாய்க் கோட்டாட்சியா் ச. சிவக்குமாா், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) உமா, கூட்டுறவுத் துணைப் பதிவாளா் மணிமேகலை உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.