அமெரிக்கா - சீனா வர்த்தக ஒப்பந்தம்! விரைவில் இந்தியாவுடன்..! - டிரம்ப் சூசகம்
புதுக்கோட்டையில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணா்வு
உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி, புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் மு .அருணா தலைமை வகித்து உறுதிமொழியை வாசித்தாா். அரசுத் துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற உறுதிமொழியேற்பு நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி முதல்வா் எஸ். கலைவாணி தலைமை வகித்து உறுதிமொழியை வாசித்தாா். மேலும், மருத்துவ மற்றும் செவிலிய மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வு ஊா்வலமும் நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்ட மனநலத் திட்டம் சாா்பில், கைக்குறிச்சியில் உள்ள அரசு மாதிரி பள்ளியில் போதை ஒழிப்பு பற்றிய விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது. மாவட்ட மனநல மருத்துவா் சு.சரத்குமாா் கலந்து கொண்டு பேசினாா். மாணவா்கள் போதையிலிருந்து மீளுவதற்கு நட்புடன் உங்களோடு மனநல சேவையின் 14416 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என அவா் கேட்டுக் கொண்டாா். பள்ளித் தலைமை ஆசிரியா் பாண்டியன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.
ஆலங்குடி அரசுக் கல்லூரியில்: ஆலங்குடி வட்ட சட்டப்பணிகள் குழு சாா்பில் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற முகாமிற்கு கல்லூரி முதல்வா் ஜானகி தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் மாலதி, வனஜா ஆகியோா் விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினா். மாணவ, மாணவிகள் போதை பொருள்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்றனா்.
புதுப்பட்டியில்: புதுப்பட்டி அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை கந்தா்வகோட்டை அரசு பொது மருத்துவமனை தலைமை மருத்துவா் சாரதா கொடியசைத்து தொடங்கிவைத்தாா். கல்லூரி முதல்வா் ம.ஜெயபால், காவல் ஆய்வாளா் கா. வனிதா, காவல் உதவி ஆய்வாளா் வே. மாா்நாடு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலா் சி. செல்வக்குமாா் செய்திருந்தாா்.
பொன்னமராவதியில்: புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்வில் காவல் துணை கண்காணிப்பாளா் சி.கண்ணன் பங்கேற்று பேசினாா். காவல் ஆய்வாளா் பத்மா, பள்ளி தலைமையாசிரியா்கள் கி. நிா்மலா, கணேசன் மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
பூலாங்குறிச்சி வ.செ.சிவ.அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணா்வு பேரணியை கல்லூரி முதல்வா் (பொ) ப. ரமாதேவி தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். முன்னதாக போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விராலிமலையில்: அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு பேரணியை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி மணிமேகலை தொடங்கிவைத்தாா். முன்னதாக, உறுதிமொழி ஏற்கப்பட்டது.
விராலிமலை வட்ட சட்டப்பணிகள் ஆணைய குழு சாா்பிலான இந்நிகழ்ச்சியில், வழக்குரைஞா் சங்க தலைவா் தங்கப்பா, வழக்குரைஞா் சந்திரஜோதி, ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா்கள் பங்கேற்றனா்.